தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி தர மறுத்து மத்திய அரசு ஓரவஞ்சனை: லோக்சபாவில் ஆ.ராசா ஆவேசம்!
டெல்லி: தமிழ்நாட்டுக்கு உரிய வெள்ள நிவாரண நிதியை வழங்க மறுத்து மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓரவஞ்சனை செய்வதாக லோக்சபாவில் திமுக எம்பி ஆ.ராசா ஆவேசமாக குற்றம்சாட்டினார்.
17-வது லோக்சபாவின் இறுதி கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில் கடந்த 1-ந் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

திருச்சி சிவா: ராஜ்யசபாவில் நேற்று பேசிய திமுக எம்பி திருச்சி சிவா மத்திய பாஜக அரசை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். திருச்சி சிவா எம்பி நேற்று பேசுகையில், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பெரிய அளவில் பாகுபாடு காட்டுகிறது. தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே மத்திய அரசால் திரும்ப வழங்கப்படுகிறது. ஆனால் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசாவை மத்திய அரசு திரும்ப வழங்குகிறது. ஏன் தமிழ்நாட்டுக்கு இந்த அநீதி? புயல், மழை பாதிப்புகளுக்காக ரூ.37,000 கோடியை தமிழ்நாடு கோரியது இதுவரை மத்திய அரசு ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஆந்திராவுக்கும் அநீதி: மேலும் ஆந்திராவும் 10 ஆண்டுகளாக அவர்கள் சிறப்பு நிதி கேட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் ஏன் முஸ்லிம்களை ஒதுக்கினர்? இலங்கை தமிழர்கள் கை விடப்பட்டது ஏன் ? 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் உள்ளார்கள். அவர்களுக்கு குடியுரிமையை இன்னும் மத்திய அரசு கொடுக்கவில்லை. முத்தலாக் சட்டம் கொண்டுவரும் அரசு ஏன் கைம்பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர மறுக்கிறது? பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படாதது ஏன்? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

வெளுத்தெடுத்த ஆ.ராசா: இந்த நிலையில் லோக்சபாவில் இன்றைய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது திமுக எம்பி ஆ.ராசா பேசினார். ஆ.ராசா பேசுகையில், தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய பாஜக அரசு பாரட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டை புயல் தாக்கியது; பெருமழையால் வெள்ளம் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு ரூ37,000 கோடி நிவாரண நிதி கேட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு நிவாரண நிதி எதனையுமே தரவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த பாரட்சம் என நாங்கள் கேள்வி எழுப்பினால் மத்திய அமைச்சர்கள் அலட்சியமாக, பொறுப்பில்லாமல் பதில் தருகின்றனர் என்றார்.
மாற்றாந்தாய் மனப்பான்மை: மேலும், தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாக இணை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் குஜராத்துக்கு ஒரு நீதி? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா? மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டை மாற்றந்தாய் மனபான்மையுடன் நடத்துகிறது; மாநில பேரிடர் நிதி வேறு; தேசிய பேரிடர் நிதி வேறு; வெள்ள நிவாரண நிதி தொடர்பாக எந்த ஒரு மத்திய அமைச்சரும் இதுவரை உறுதி மொழி வழங்கவே இல்லையே? இவ்வாறு ஆ.ராசா பேசினார்.












Click it and Unblock the Notifications