தியாகம் என்றால் என்னவென்று புரியாது.. விடுதலை போரிலும் பங்கு கிடையாது! பாஜகவை கட்டம் கட்டிய கனிமொழி
டெல்லி: பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கெடுத்து பேசிய திமுக எம்பி கனிமொழி, ரயில் நிலையங்கள் உட்பட பல இடங்களில் இந்தி திணிக்கப்படுவதாகவும், பாஜகவுக்கு மொழிப்போராட்டத்தின் தியாகம் தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. குறிப்பாக, பட்ஜெட்டில் பாஜக ஆதரவு மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதிலும் பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு மட்டும் கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இப்படி இருக்கையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி பாஜக மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்திருக்கிறார். அவர் பேசியதாவது, "ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். ரயில் நிலையங்கள் உள்பட பல இடங்களில் இந்தி திணிப்பு நடந்து வருகிறது. சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சி செய்யப்படுகிறது.
மொழிக்கொள்கையில் நீங்கள் எப்படி நடந்துக்கொள்வீர்கள் என்பதற்காக நான் கேந்திரிய வித்யாலயா குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பள்ளிகளில் மாநில மொழியை கற்றுத் தருவோம் என்று சொல்கிறீர்கள். தமிழகத்தில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் மாணவர்கள் தமிழை கற்க வேண்டும் எனில், 20 மாணவர்கள் ஒன்று கூடி தலைமை ஆசிரியரிடம் தமிழ் கற்க விருப்பம் இருக்கிறது என கோரிக்கை வைக்க வேண்டும்.
அப்படி வைக்கப்பட்ட பின்னர் தமிழுக்கான ஆசியர்கள் கிடைத்தால் அவர்கள் நியமிக்கப்பட்டு தமிழ் கற்பிக்கப்படும். இந்த பள்ளிகளில் நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி போராடி தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படியாக 45 பள்ளிகளில் வெறும் 15ல்தான் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இது மத்திய அரசு கடைபிடிக்கும் மொழிக்கொள்கைக்கு உதாரணம். இப்படி இருக்கையில் இந்த கொள்கையில் நீங்கள் நியாயமாக நடந்துக்கொள்வீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது?
ரயில் நிலையங்களுக்கு சென்று பயணச்சீட்டு பெற முடியவில்லை. அங்கு இந்தியை திணித்து வைத்திருக்கிறீர்கள். இந்தியை மட்டுமா? சமஸ்கிருதத்தையும் திணித்து வைத்திருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாங்கள், பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளில் உணவு வழங்குகிறோம். மதிய உணவு திட்டத்தை தொடக்கி வைத்தது தமிழ்நாடுதான். அதேபோல, காலை உணவு திட்டத்த எங்களது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் தொடங்கி வைத்தார். இது இன்றைக்கு இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கிறது.
ஆனால் மறுபுறம், மத்திய அரசு சார்பில் பிஎம் போஷா எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கான உணவுக்கு ரூ.11 ஆயிரம் கோடி தேவை என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பதோ வெறும் ரூ.10 ஆயிரம் கோடி. இப்படி இருக்கையில் நீங்கள் எங்களுக்கு கல்வி குறித்து பாமெடுக்கிறீர்களா?
உலகிலேயே வேறு எங்காவது மொழிப்போராட்டத்திற்கு நூற்றுக்கணக்கான உயிரைத் தியாகம் செய்தவர்களை நீங்கள் காட்ட முடியுமா? இந்த நாட்டின் விடுதலை போராட்டத்தில்கூட நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. அதனால் உங்களுக்கு தியாகம் என்றால் என்னவென்று புரியாது" என்று பாஜகவை கனிமொழி விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications