ராஜ்நாத்சிங்கிற்கு சூசகமாக பதிலடி கொடுத்த திமுக எம்.பி.! களேபரங்களுக்கு மத்தியில் கன்னிப்பேச்சு!
டெல்லி: மாநிலங்களவையில் நேற்று தனது கன்னிப்பேச்சை பதிவு செய்த திமுக எம்.பி.ராஜேஷ்குமார், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு சூசகமாக பதிலடி கொடுத்த விவகாரம் அக்கட்சியில் பேசுபொருளாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத் உள்ளிட்டோர் உயிரிழந்தது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழக அரசின் துரித நடவடிக்கைகள் பற்றி பெரிதாக எதையும் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் முதல் ஆளாக குன்னூர் விரைந்ததையும், பிபின் ராவத் உடலுக்கு மரியாதை செலுத்தி அதை டெல்லிக்கு அனுப்பி வைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் திமுக எம்.பி.ராஜேஷ்குமார் பட்டியலிட்டார்.

புகழாரம்
மேலும், தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும், உதயநிதி ஸ்டாலின் குறித்தும் ராஜேஷ்குமார் எம்பி புகழாரம் சூட்டிய நிலையில், அதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநிலங்களவை துணைத் தலைவர் சஸ்மித் பத்ரா, திமுக எம்.பி.ராஜேஷ்குமாரை அது போன்று பேசக்கூடாது என்றும் பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட தலைப்பான இந்திய மருந்தியல் மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்திற்கான சட்ட முன்வடிவு பற்றி மட்டுமே பேச வேண்டும் எனவும் கண்டிப்பு காட்டினார்.

அவைக்குறிப்பு
இருப்பினும் ''ஐ ஒபே யுவர் ஆர்டர் சார், ப்ளீஸ் அல்லோ மீ'' எனக் கூறிக்கொண்டே தாம் சொல்ல நினைத்த அனைத்து கருத்துக்களையும் மடமடவென பதிவு செய்தார். ''ராஜேஷ்குமார் ஜீ ப்ளீஸ் ப்ளீஸ்'' என கெஞ்சிப் பார்த்த மாநிலங்களவை துணைத் தலைவர், ஒரு கட்டத்தில் கன்னிப்பேச்சு என்பதால் ராஜேஷ்குமார் பேசுவதை சிரிப்புடன் ரசித்துக்கொண்டிருந்தார்.

மத்திய அரசின் திட்டம்
இதனிடையே மத்திய அரசின் நிதி திட்டம் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே இருப்பதாகவும் அதனை செயல்படுத்த காலக்கெடு விதிக்க வேண்டும் எனவும் ராஜேஷ்குமார் எம்.பி. தனது கன்னிப்பேச்சில் பதிவு செய்திருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டதோடு சரி, இன்று வரை அந்தப் பணிகள் எள்ளளவும் தொடங்கப்படவில்லை. இந்த சூழலில் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த காலக்கெடு விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பது தேசியளவில் குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களில் பெரும் வரவேற்பையும், கவன ஈர்ப்பையும் பெற்றிருக்கிறது.

சபாநாயகர்
அண்மையில் சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில், ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என அப்பாவு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த காலக்கெடு கோரி திமுக எம்.பி. தனது கன்னிப்பேச்சில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications