தனியார் ரயில் மக்களுக்கு எதிரானது.. கோவை-ஷீரடி ரயிலை அரசே இயக்கனும் -திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிதம்
டெல்லி: கோவை - ஷீரடி இடையேயான பாரத் கௌரவ் தனியார் ரயிலை அரசே இயக்க வேண்டும் என்றும், இது மக்களுக்கும் பொதுத்துறைக்கும் எதிரானது எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதி இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் செல்ல 5 நகரங்களிலிருந்து பாரத் கௌரவ் என்ற திட்டத்தின் ரயில்களை இயக்க ரயில்வே துறை அனுமதி வழங்கியது.
அந்த வகையில் கோவையிலிருந்து ஷீரடி செல்லும் ரயில் கடந்த 14 ஆம் தேதி முதல் முறையாக இயக்கப்பட்டது. இதனை கோவையை சேர்ந்த எம்.என்.சி. பிராபர்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயக்குகிறது.

திமுக ஏற்காது
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுதி இருக்கும் கடிதத்தில். "கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து ஷீரடி வரை பாரத் கௌரவ் ரயிலை தனியார் இயக்குவதற்கு அனுமதி அளிப்பதை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், திமுக நீண்டகால மக்கள் நலன் கொள்கைக்கும், பொதுத்துறைக்கும் இது எதிரானது.

1,092 பயணிகள் செல்லலாம்
இந்த ரயில் சேவை என்பது முக்கியமான தொழில் நகரங்கள் மற்றும் ஆன்மீக தளங்களை இணைக்கிறது. ஆனால், இந்த ரயிலை தனியார் மூலம் இயக்குவது இந்திய ரயில்வேயின் நோக்கம் மற்றும் கடமையை தவறவிடும் செயல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த முக்கியமான ரயிலில் உள்ள 20 பெட்டிகளில் 1,092 பயணிகள் செல்ல முடியும்.

இந்தியன் ரயில்வே நடத்த வேண்டும்
இதனை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே எடுத்து நடத்த வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக மக்கள் நலனில் அதிக மரியாதை வைக்காத மத்திய அரசு, தனியாரை நம்பி முக்கியமான ரயில் சேவையை ஒப்படைத்து இருப்பதை திமுக கடுமையாக எதிர்க்கிறது. இந்த தனியார்மயமாக்கலின் விளைவாக கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

முடிவை கைவிட வேண்டும்
இதனால் தனியாருக்கு மட்டுமே லாபம். எனவே மத்திய அரசு கோவை - ஷீரடி இடையே இயக்கப்படும் ரயிலை தனியாருக்கு வழங்கிய முடிவை மறுபரிசீலனை செய்து அதை திரும்பப்பெற வேண்டும். இந்திய ரயில்வேயின் மீது நம்பிக்கை வைத்து இதை அரசே எடுத்து நடத்தி தமிழ்நாடு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்." என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications