"ஏக் பியார் கா நக்மா.." ராகத்தோடு பாடிய திருச்சி சிவா.. பகுத் அச்சா.. ரசித்து கேட்ட எம்.பி.க்கள்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமாக பதவி வகிப்பவர் குலாம் நபி ஆசாத். இவரது பதவி காலம் நிறைவடைவதையொட்டி, திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா டெல்லியிலுள்ள தனது வீட்டில் விருந்து அளித்தார்.
இந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரமேஷ் போக்ரியால் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சில எம்பிக்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், ரத்தத் திலகம், படத்தில் இடம் பெற்ற "பசுமை நிறைந்த நினைவுகளே.." என்று துவங்கும் தமிழ் பாடலை பாடி பிரிவு உபசாரத்திற்கு 'டெம்போ' கூட்டினார் திருச்சி சிவா.
தமிழ், இந்திப் பாட்டுகள்
இந்த பாட்டு, கல்லூரியில் ஒன்றாக படித்த, மாணவ மாணவிகள் பிரிந்து செல்லும்போது பாடும் பாட்டு என்பதால், பக்காவாக இந்த நிகழ்ச்சிக்கு அது பொருந்திப்போனது. அதுமட்டுமல்ல.. குலாம்நபி ஆசாத் மற்றும் வடமாநில எம்பிக்களுக்கு மிகவும் பரிச்சயமான, 'ஏக் பியார் கா நக்மா' என்ற பாடலை ஹிந்திப் பாடலை அதே மெட்டில் அவர் பாடி அசத்தினார். இது அங்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்திழுத்தது.
காஷ்மீர் பியூட்டிபுல்
தமிழக எம்பிக்கள் பாடல் பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்துவது இது முதல் முறை கிடையாது. அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், "காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் காஷ்மீர் வொண்டர்புல் காஷ்மீர் இது மிகவும் பிரபலமான பாட்டு... புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடி நடித்திருப்பார். காஷ்மீரில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை... காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை இந்தியா ஒன்றுதான்..." என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் நவநீதகிருஷ்ணன் ராகம் எடுத்து பாட்டுப் பாடியிருந்தார்.
நவநீதகிருஷ்ணன்
ஆனால் முக்கியமான விஷயத்தில் சீரியஸ் இல்லாமல் பேசியதாக விமர்சனமும் எழுந்தது. சிவா பாடிய ஹிந்தி பாடல் இடம் பெற்ற படம், Shor. 1972ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், லதா மங்கேஷ்கர் மற்றும் முகேஷ் ஆகியோர் பாடிய பாடலைத்தான் திருச்சி சிவா அசலாக பாடியிருந்தார்.
அசந்து போன விருந்தினர்கள்
திருச்சி சிவா தனது இல்லத்தில் வைத்து நடத்திய தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இவரது பாடல் அனைத்தும், அங்கு வந்து இருந்தவர்களால் பொறுமையாக, ரசித்து பார்க்கப்பட்டது. பேச்சில் மட்டும் கிடையாது, பாடலிலும் திருச்சி சிவா திறமைசாலிதான் என்று சக எம்பிக்கள் சிலாகித்துச் சென்றனர்.