காஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா
டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை விமர்சித்து வரும் மலேசியாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டில் இருந்து பாமாயில் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்வதை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரை இந்தியா படையெடுத்து ஆக்கிரமித்திருக்கிறது என ஐநா சபையில் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது குற்றம்சாட்டினார். அதற்கு முன்னர் மதமோதல்களை தூண்டும் ஜாஹிர் நாயக்கை நாடு கடத்தும் விவகாரத்திலும் இந்தியாவின் கோரிக்கையை மலேசியா கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
இப்படி தொடர்ச்சியாக இந்தியாவை சீண்டும் நடவடிக்கைகளில் மலேசியா ஈடுபட்டு வருகிறது. இதனால் மலேசியாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டில் இருந்து பாமாயில் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மலேசியாவுக்கு பதில் இந்தோனேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்யலாம் என்பதும் மத்திய அரசின் திட்டம். அர்ஜெண்டினாவில் இருந்து சோயா ஆயில், உக்ரைனில் இருந்து சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றையும் இறக்குமதி செய்து பாமாயில் எண்ணெய் தேவையை சமாளித்துவிட முடியும் என்பது மத்திய அரசின் திட்டம்.
இத்தகவல்களால் மலேசியாவின் பங்கு சந்தையில் பாமாயில் எண்ணெய் நிறுவன பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டிருக்கின்றன.