"சாட்டையை" சுழற்றும் திமுக.. நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை கையில் எடுக்கிறது.. பரபர நோட்டீஸ்!
-அதானி குழுமம் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய சரிவை கடந்த 4 நாட்களில் சந்தித்து உள்ளது.
டெல்லி: இன்று நாடாளுமன்றத்தில் அதானி - ஹிண்டர்ன்பர்க் விவகாரம் எதிரொலிக்க உள்ளது. அதானி பங்கு சரிவு குறித்து ராஜ்ய சபாவில் விவாதிக்க திமுக கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக ராஜ்ய சபா விவகாரங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்பி நோட்டீஸ் அளித்துள்ளார்.
அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் சரமாரி புகார்களை வைத்து உள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக சரிந்து வருகின்றன.
இந்த அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 31 சதவிகிதம் சரிவை பதிவு செய்துள்ளது.

பங்கு சந்தை
பங்கு சந்தையே இதனால் ரத்தக்களரியாக மாறி உள்ளது. அதானி குழுமம் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய சரிவை கடந்த 4 நாட்களில் சந்தித்து உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு குழுமத்தின் பங்கு 4 நாட்களில் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்ததே இல்லை. அதிலும் நேற்று அதானி குழுமத்தின் பங்குகள் எல்லாம் மிக மோசமாக சரிந்துள்ளன. கடந்த 4 நாட்களில் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவிகிதம் சரிந்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகள் உண்மையான நிலையை அடையும் வரை அவர் தொடர்ந்து சரிந்து கொண்டேதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிண்டர்ன்பர்க்
ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைதான் இந்த சரிவிற்கு எல்லாம் காரணம். அதில், அதானி நிறுவனம் தனது வருமானத்தை பொய்யாக உயர்த்தி காட்டி உள்ளது, உறவினர்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி போலி பரிவர்த்தனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பங்குகளை பொய்யாக உயர்த்தி அதை வைத்து கடனும் வாங்கி உள்ளது, அதாவது பொய்யாக கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் பொய்யாக உயர்த்தப்பட்ட பங்குகளை வைத்து கடன் வாங்கி உள்ளது. கையில் பணமே இல்லாமல் எல்லாம் பொய்யான முதலீடுகள் மூலம் வரவு செலவு இருப்பதாக காட்டி ஏமாற்றி உள்ளது.

வரவு செலவு
தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டர்ன்பர்க் வைத்தது. இதை அதானி குழுமம் மறுத்து இருந்தாலும், ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் தங்கள் ரிப்போர்ட்டில் உறுதியாக உள்ளது. இந்த நிலையில்தான் இன்று நாடாளுமன்றத்தில் அதானி - ஹிண்டர்ன்பர்க் விவகாரம் எதிரொலிக்க உள்ளது. அதானி பங்கு சரிவு குறித்து ராஜ்ய சபாவில் விவாதிக்க திமுக கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக ராஜ்ய சபா விவகாரங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்பி நோட்டீஸ் அளித்துள்ளார்.

நாடாளுமன்றம்
முன்னதாக லோக்சபா, ராஜ்ய சபாவில் இந்த விவகாரத்தை பற்றி பேச வேண்டும். இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படியே இன்று திமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் இந்த விவகாரத்தை ராஜ்ய சபாவில் எழுப்ப உள்ளது. இதனால் இன்று நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்ப்ரைஸ் நிறுவனம் பங்குசந்தையில் புதிய பங்குகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 20 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்காக அந்த நிறுவனம் வெளியிட இருந்த பங்குகளை மொத்தமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications