கொல்கத்தா கொடூரம்.. டெல்லியில் களமிறங்கிய மருத்துவர்கள்! நீதி கேட்டு பேரணி
டெல்லி: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலைக்கு நீதி கேட்டு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், மருத்துவர்கள் இன்று பேரணியை நடத்துகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறை, மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறினர்.

இது மேற்கு வங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், உயிரிழந்த சக மருத்துவருக்காக நீதி கேட்டு போராடி வருகின்றனர். போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முழு வீரியத்துடன் செயல்படாமல், முடங்கியுள்ளது.
மருத்துவர் கொலை வழக்கு, தொடக்கத்தில் மேற்கு வங்க போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு நியமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இருப்பினும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று மருத்துவர் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் பேரணி நடத்தியுள்ளனர். இதனை அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தலைமையேற்று நடத்துகிறது. இதில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். பேரணி இன்று பிற்பகல் 3 மணியளவில் தொடங்குகிறது.
போராட்டம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “உயிரிழந்த மருத்துவர், அன்றைய தினம் தொடர்ந்து 30 மணி நேரம் வரை பணி செய்திருக்கிறார். பணி முடிந்து ஒய்வெடுக்க அவர் ரூமுக்கு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவம் நடந்த பகுதி ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி கிடையாது. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மாநில தலைமை மருத்துவனையில்தான் இது நடந்திருக்கிறது. அப்படியெனில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடையாதா? என்கிற கேள்வி எழுகிறது. இதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்” என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications