மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதிய கெஜ்ரிவால்! டெல்லி சட்டசபை தேர்தலில் என்ன நடக்கும்? கவனிக்கும் பாஜக
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தான் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தார். அமலாக்கத்துறை, சிபிஐ கைதை தொடர்ந்து கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது முதல்வராக அந்த கட்சியை சேர்ந்த அதிஷி உள்ளார்.

விரைவில் டெல்லியில் சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. அதாவது அடுத்த மாதம் (பிப்ரவரி) டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம். டெல்லியை பொறுத்தவரை மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தனித்து ஆட்சியை பிடிக்க ஒரு கட்சிக்கு 36 இடங்கள் தேவை.
இந்நிலையில் தான் தற்போது டெல்லியில் அரசியல்களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆம்ஆத்மி கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. இதனால் இந்த முறையும் வென்று ஹாட்ரிக் முறையில் ஆட்சியை தக்கவைக்க அந்த கட்சி செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் டெல்லி தலைநகராக உள்ளதால் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜகவும் வியூகம் வகுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் இழந்த செல்வாக்கை மீட்கும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் தான் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பாஜக செய்யும் தவறான செயல்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் உடந்தையாக இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக மோகன் பகவத்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக டெல்லியில் ஆர்எஸ்எஸ் பிரசாரம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லியில் பாஜக பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்க நினைக்கிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தலித் மற்றும் புர்வாஞ்சாலிஸ் மக்களின் பெயர்களை அதிகளவில் நீக்கி உள்ளது.
பாஜகவின் இத்தகைய செயல் ஜனநாயகத்துக்கு நல்லது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா? அதேபோல் டெல்லியில் பிரசாரம் செய்ய வருவதற்கு முன்பாக பாஜக செய்யும் தவறுகளுக்கு ஆர்எஸ்எஸ் சப்போர்ட் செய்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஆம்ஆத்மி கட்சி மீது பாஜக பகிரங்கமாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தது. அதாவது வாக்கி வங்கி அரசியலுக்காக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியினர் ரோஹிங்ஹியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இஸ்லாமியர்களை அழைத்து வந்து டெல்லியில் சட்டவிரோதமாக தங்க வைத்து ஓட்டுரிமையை பெற்று கொடுக்கின்றன என்று பாஜக குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு பதிலடியாக அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது குற்றம்சாட்டி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications