அமெரிக்காவில் 70% வேக்சின் போட்ட பிறகும்.. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. வேக்சின் பலன்தான் என்ன?
டெல்லி: அமெரிக்காவில் சுமார் 70% பேருக்கு வேக்சின் அளிக்கப்பட்ட போதிலும், டெல்டா கொரோனா காரணமாக இப்போது அங்குத் தினசரி வைரஸ் பாதிப்பு ஒரு லட்சமாக மீண்டும் அதிகரித்துள்ளது.
உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்கா தான் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக உள்ளது. கொரோனா முதல் அலை பரவ தொடங்கிய போதே அங்குப் பலர் உயிரிழந்தனர்.
உலகிலேயே கொரோனாவால் அதிகப்படியான மக்களை இழந்த நாடாக அமெரிக்கா தான் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 6.3 லட்சம் மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனாவை கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் தோல்வியடைந்ததும் முக்கிய பேசு பொருளானது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக பைடன் பொறுப்பேற்ற பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகம் முக்கியத்துவம் அளித்தார். மேலும், கொரோனா வேக்சின் பணிகளை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அங்கு எடுக்கப்பட்டன.

மீண்டும் ஒரு லட்சம்
மக்களிடையே வேக்சின் பற்றி தயக்கம் முதலில் இருந்தது என்றாலும், காலப்போக்கில் பலரும் வேக்சின் எடுத்துக் கொண்டனர். இதனால் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வந்தது. கடந்த ஜூன் மாதம் வரையிலும் அங்கு தினரசி வைரஸ் பாதிப்பு 11 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு மளமளவென அதிகரித்த தினசரி வைரஸ் பாதிப்பு, இப்போது மீண்டும் ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.

70% வேக்சின்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து, ஒன்பது மாதம் கழித்து, நவம்பர் மாதத்திலேயே தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 2.5 லட்சம் வரை சென்றது. ஆனால், இப்போது 2ஆம் அலையில் வெறும் ஆறு வாரத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதிலும் அமெரிக்காவில் ஏற்கனவே சுமார் 70% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்புகளும் அதிகம்
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தினசரி சுமார் 200 பேர் கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இப்போது அது அப்படியே இரட்டிப்பாகியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வேக்சின் போட மறுக்கும் மக்கள் மத்திலேயே வைரஸ் வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

ஏன் அதிகரிக்கிறது
இது குறித்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் ரோஷெல் வாலென்ஸ்கி கூறுகையில், "அதிகப்படியான மக்கள் வேக்சின் போட மறுத்தால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. வேக்சின்கள் மீது சிலருக்குச் சந்தேகம் உள்ளது. ஆனால், வேக்சின் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், இன்று தினசரி கொரோனா பாதிப்பு பல லட்சமாகவும் உயர்ந்திருக்கும் ஆபத்து உள்ளது" என்று அவர் தெரிவித்தார். வேக்சின் பணிகள் அதிகளவில் நடைபெறாத இடங்களில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் சில இடங்களில் கொரோனா படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல சில இடங்களில் படுக்கைகள் காலியாக இல்லாததால், நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்கா எந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது.

டெல்டா கொரோனா
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க டெல்டா கொரோனாவே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா இப்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இது மற்ற கொரோனா வகைகளைவிட வேகமாகப் பரவுவதால், வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெல்டா கொரோனாவுக்கு எதிராக வேக்சின் தடுப்பாற்றல் குறைந்தாலும்கூட, தீவிர கொரோனா பாதிப்பை வேக்சின்கள் தடுப்பதால் மக்கள் விரைவாகத் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications