அக்னிபாத்: "ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தாதீர்கள்" மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள்..!
டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள், ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
இந்திய ராணுவத்தில் புதிதாக இளைஞர்களை தேர்வு செய்வதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தில் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்ற அழைக்கப்படுவர். வெறும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இது பல்வேறு தரப்பினர் மத்தில் விமர்சனங்களை பெற்றது.

வடமாநிலங்களில் வெடித்த போராட்டம்
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹார், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அடுத்த சில நாட்களில், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில் நிலையங்களில் எதிர்ப்பை பதிவு செய்தனர். பீஹாரில் உள்ள சமஸ்திபூர் மற்றும் லாக்கிசெராய் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன.

தெலங்கானாவில் இளைஞர் பலி
இதனிடையே தெலங்கானாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ராகேஷ் என்பவர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு தரப்பில் ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் அறிவித்துள்ளார். அதேபோல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் உயிரிழப்புக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் என்றும் சந்திர சேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

ரயில்வே பாதிப்பு
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக தெலங்கானா, பீஹார், உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் ரயில்வே கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே அமைச்சர் வேண்டுகோள்
அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வே சொத்துகள் பாதுக்கப்படுவது குறித்து பேசியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இளைஞர்கள் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இளைஞர்கள் யாரும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம். ரயில்வே என்பது நாட்டின் சொத்து, அவற்றை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications