ஏற்கனவே கொரோனா வந்திருந்தால் மீண்டும் தாக்காது என நினைக்க வேண்டாம்.. பூனவல்லா ஷாக் வார்னிங்
டெல்லி: ஒருமுறை கொரோனா வந்தால் மீண்டும் வராது என்று அசட்டு தைரியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு விட்டீர்களா? அப்படி என்றால், உங்களுக்கு மீண்டும் வராது என்று எண்ண வேண்டாம். கொரோனா இரண்டாவது அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. எனவே நீங்கள் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை நீண்ட காலத்திற்கு பின்பற்றுங்கள் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவ தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. இதுவரை உலகளவில் 5.2 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பேருக்கு பரவியும் கொடிய கொரோனா (SARS-CoV-2) பற்றி இன்னும் மருத்துவர்களுக்கே சரியாக புரியவில்லை.
உலகலாவிய தொற்று நோய்
மார்ச் 11 அன்று, உலக சுகாதார அமைப்பு (WHO) கொரானா பரவலை, உலகலாவிய தொற்றுநோயாக அறிவித்தது. சுகாதார அவசர நிலையும் அறிவித்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐந்து மாதத்தில் வரும்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும் மீண்டும் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதாகவே மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. அண்மையில், ஐ.சி.எம்.ஆர் உயர் அதிகாரி இதுபற்றி கூறும் போது, ஒருவர் கொரோனா பாதித்து குணமடைந்த ஐந்து மாத காலத்திற்குள் உடலில் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டால், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படலாம் என்று கூறினார்.
மறுபடியும் கொரோனா தாக்கும்
இந்நிலையில் பல உலகளாவிய ஆய்வுகளின் படி, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஆன்டிபாடிகள் விரைவாகக் குறைவது தெரிகிறது. லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கொரோனா நோயாளிகளுக்கு மறுபடியும் வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்ட பின்னர் அறிகுறிகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) ஆதார் பூனவல்லா, கொரோனா வைரஸ் தொற்றின் பேரழிவு தரும் விளைவுகளைப் பற்றி பேசும் ப்ளூம்பெர்க்கின் அறிக்கையைப் பகிர்ந்துகொண்டார், அவர் தனது ட்வீட் பதில்: "இப்போது கொரோனாவின் பயங்கரமான நீண்டகால விளைவுகள் பற்றிய தெளிவான தகவல்கள் உள்ளன, எனவே நீங்கள் ஒரு முறை மட்டுமே பாதிக்கப்படுவீர்கள் என்று நினைக்க வேண்டாம் சில மாதங்களில் நீங்கள் மீண்டும் பாதிக்கப்படலாம்., எனவே தயவுசெய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடருங்கள். நீண்ட கால விளைவுகளைப் பற்றி இங்கே படியுங்கள். " என்று கூறியுள்ளார்.