டிரைவிங் லைசென்ஸ்..இந்த வாகனங்களை இனிமேல் இயக்க முடியாதா?..அரசுக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
டெல்லி: இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான, டிரைவிங் லைசென்ஸ் குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மோட்டார் வாகனங்களை ஓட்ட அனைவருக்கும் செல்லுபடியாகும், டிரைவிங் லைசென்ஸ் தேவை... இந்த டிரைவிங் லைசென்ஸ் உரிமம் என்பது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆர்டிஓ (Regional Transport Office) அலுவலகம் மூலம் வழங்கப்பட்டும் வருகிறது. இது நாடு முழுவதும் செல்லுபடியாகும் ஆவணமாகும்.

சுப்ரீம்கோர்ட்: ஒரு நபர் வாகனம் ஓட்ட விரும்பினால், முதலில் கற்றல் நோக்கத்திற்காக அவருக்கு கற்றல் உரிமம் தரப்படும்.. இது வெறும் 6 மாத காலமே உள்ள தற்காலிக உரிமமாகும்.. அதற்கு பிறகுதான், நிரந்தர உரிமம் தரப்படுகிறது. அந்தவகையில், பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஏற்ப, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
ஆனால், 2017ல் சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பில், 7,500 கிலோ வரை எடையுள்ள பயணியர் வாகனங்கள், இலகுரக மோட்டார் வாகனம் என்பதற்கான வரையறையில் இருந்து நீக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, விபத்துகளில் காப்பீடு வழங்குவது உள்ளிட்டவற்றில் குழப்பம் உள்ளதாக, 76 வழக்குகள் சுப்ரீம்கோர்ட்டில் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவைகளை 3 நீதிபதிகள் அமர்வு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு பரிந்துரைத்தது.
வழக்கு விசாரணை: அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான சட்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது.. நேற்றைய தினமும் இதுகுறித்த விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்தது.. அப்போது நீதிமன்றம் இதுகுறித்து பிறப்பித்திருக்கும் உத்தரவு இதுதான்:

"இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான லைசென்ஸ் பெற்றவர்கள், குறிப்பிட்ட எடையுள்ள இலகு ரக மோட்டார் வாகன பிரிவில் உள்ள வர்த்தக பயன்பாட்டு வாகனத்தை ஓட்டலாமா என்பது ஒரு கொள்கை முடிவாகவே இருக்க முடியும். இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதிரடி விசாரணை: மக்களின் பாதுகாப்பு, காப்பீட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, தன் பதில் மனுவை மத்திய அரசு இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் அரசியலமைப்பு சட்டம் தொடர்பானது கிடையாது என்றாலும், மத்திய அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடக்கும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications