பரிசோதனைகள்& தடுப்பூசி பணிகள் குறைவதால்.. விரைவில் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம்.. வல்லுநர்கள் வார்னிங்
டெல்லி: நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதைப் போல தோன்றும் அதே நிலையில், பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் குறைந்துள்ளதால், மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் தீவிர தன்மை மிக மோசமாக உள்ளது.
இணை நோய் இல்லாதவர்கள், இளைஞர்கள் கூட கொரோனா 2ஆம் அலையில் உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அல்லது அதற்கு நிகரான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Array
பொதுவாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானது என்பது வல்லுநர்கள் கருத்து. ஒன்று தடுப்பூசி, மற்றொன்று அதிகளவிலான கொரோனா பரிசோதனை. அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே மாநிலத்தில் எத்தனை பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்பது குறித்துத் தெளிவாகக் கண்டறிய முடியும். அதன் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்

பரிசோதனைகள் மிகவும் குறைவு
இந்தியாவிடம் தினசரி 33 லட்சம் பரிசோதனைகள் வரை செய்யும் திறன் உள்ளது. ஆனால் இந்தியாவில் தினசரி 10 முதல் 18 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது நாட்டில் 45% பரிசோதனை திறன் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கொரோனா பரிசோதனைகள் குறைந்துள்ளதால், உண்மையான பாதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் மயானங்கள் நிரம்பியுள்ளதே இதற்குச் சாட்சி.

தடுப்பூசி பணிகள்
மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் குறைந்துள்ளன. குறிப்பாகக் கடந்த நான்கு வாரங்களாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக மோசமாகக் குறைந்துள்ளது. தற்போது தினசரி 18 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதே வேகத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால், நாட்டிலுள்ள 80% தடுப்பூசி செலுத்தக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம். நாட்டிலுள்ள 18+ மேற்பட்ட 112 கோடி பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால் நாம் தினசரி 89 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

பெரும் தட்டுப்பாடு
ஆனால், அந்த இலக்கை தற்போதைய சூழலில் எட்ட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் தற்போது தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் 18-44 வயதினருக்குத் தடுப்பூசி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த மூன்று நாட்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதாக அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

எப்போது அதிகரிக்கும்
நாட்டில் இப்போது பாரத் பயோடெக், சீரம் ஆகிய நிறுவனங்கள் தான் உற்பத்தி செய்கின்றன. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க இரண்டு நிறுவனங்களும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே, ஜூலை மாத இறுதியில் தடுப்பூசி நாட்டில் 51.6 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் எனச் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள்
தடுப்பூசி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மத்திய அரசு வெளிநாட்டுத் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்து இறக்குமதி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. அதில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இறக்குமதி மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும் பைசர் மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

3ஆம் அலை அபாயம்
கொரோனா 2ஆம் அலை கடந்த சில நாட்களாகக் குறைந்து வருவதைப் போலத் தோன்றுகிறது. ஆனால், பரிசோதனைகளை உடனடியாக அதிகப்படுத்த வேண்டும். அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாட்டில் மூன்றாம் அலை ஏற்படவும் வாய்ப்புள்ளது. மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிப்பட்டலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications