போதைப்பொருள் வழக்கு.. நேரில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்.. காவலை நீட்டித்து டெல்லி கோர்ட் அதிரடி
டெல்லி: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில் அவர் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லியில் உணவு பொருள் டெலிவரி என்ற பெயரில் கடத்தப்பட இருந்த ரூ. 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அதை கொண்டு வந்த சிலரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பொருள் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என தெரியவந்தது.

உணவு டெலிவரி என்ற பெயரில் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருளை அவர் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த போது ஜாபர் சாதிக் பிடிபட்டார். இதையடுத்து, அவரை டெல்லி அழைத்து வந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
தற்போது டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கை வரும் 29 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாபர் சாதிக் உடன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சதானந்தம், முஜிபுர், முகேஷ் , அசோக் குமார் ஆகியோரையும் என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் காவலும் வரும் 29 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications