விசா நீட்டிக்க மறுப்பு.. கடைசி சீனா பத்திரிகையாளரையும் வெளியேற்றிய இந்தியா! பின்னணி காரணம் இதுதான்
டெல்லி: இந்தியாவில் கடைசியாக இருந்த சீன பத்திரிகையாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் விசா நீட்டிப்பு கோரிய நிலையில் மறுப்பு தெரிவித்து இந்தியா அவரை வெளியேற்றியுள்ள நிலையில் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பிற நாட்டு பத்திரிகையாளர்கள் தங்கி செய்தி சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் தான் இந்தியாவில் சீனா பத்திரிகையாளர்களும், சீனாவில் இந்திய பத்திரிகையாளர்களும் தங்கி செய்தி வழங்கி வந்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் 4 இந்திய பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்தனர். இதில் 3 பேரின் விசா காலாவதியானது. இதையடுத்து அவர்கள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பம் செய்தனர். ஆனால் சீனா அரசு புதுப்பிக்க மறுத்தது. இதனால் அவர்கள் கடந்த மாதம் சீனாவில் இருந்து வெளியேறினர்.
இதனால் அங்கு ஒரெயொரு இந்திய பத்திரிகையாளர் மட்டுமே உள்ளார். அவர் பிடிஐ செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர். இவரது விசா காலமும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த மாதம் இறுதியில் சீனாவில் இருந்து வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது இந்தியாவை எரிச்சல் அடைய செய்தது.
இதற்கிடையே தான் சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளரான சின்ஹுவாவின் பத்திரிகையாளர் டெல்லியில் தங்கி செய்தி சேகரித்து வந்தார். இவரும் விசா நீட்டிப்பு கோரியிருந்தார். ஆனால் இந்தியா திடீரென அவருக்கு விசா நீட்டிப்பு செய்து வழங்கவில்லை. இதனால் கடந்த வாரம் அவர் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் இருந்த கடைசி சீன பத்திரிகையாளர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2020 முதல் சீன பத்திரிகையாளர்கிளன் விசாக்கள் இந்தியாவால் நீட்டிப்பு செய்து வழங்கப்படாமல் இருந்து வந்தது. மொத்தம் 14 சீன பத்திரிகையாளர்கள் இந்தியாவில் இருந்த நிலையில் தற்போது அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்மூலம் 1980க்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் சீன பத்திரிகையாளர்கள் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
முன்னதாக கடந்த 12ம் தேதி சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், ‛‛இந்தியாவில் பணியாற்றும் சீன பத்திரிகையாளர்களை இந்திய அரசு பாகுபாட்டோடும், நியாயமற்ற முறையிலும் நடத்துகிறது. விசா நீட்டிப்பு செய்யாமல் இருக்கிறது. 2020 முதல் இந்திய அரசு இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் 14 சீன பத்திரிகையாளர்கள் இந்தியாவில் இருந்த நிலையில் தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார்'' என குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் தான் சீனாவை சேர்ந்த அந்த ஒரு பத்திரிகையாளரும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‛‛சீனா உள்பட அனைத்து வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் கட்டுப்பாடுகள் இன்றி செய்தி சேகரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இருநாடுகளும் தொடர்பில் உள்ளன'' என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications