குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
டெல்லி: குளிர் காலங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் எச்சரித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் மூலமாக கேள்விகளுக்கு ஞாயிறுதோறும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் அர்தன் சண்டே சம்வாத் என்ற நிகழ்ச்சி மூலம் பதிலளித்து வருகிறார். இந்த வார சண்டே சம்வாத் நிகழ்ச்சியில் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

குளிர்காலத்தில் அதிகரிக்கும்
பொதுவாக சுவாச பிரச்சனைகளை உருவாக்கும் வைரஸ்கள் குளிர்காலங்களில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும். குளிர்காலங்களில் வீடுகள் உள்ளிட்டவைகளில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும். இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆகையால் இந்தியாவிலும் குளிர்காலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கருத்துகளை நிராகரிக்க முடியாது. இது அச்சமூட்டுவதற்கான தகவல் அல்ல. எச்சரிக்கைக்குரியதுதான்.

3 மாநிலங்கள் தவிர
கொரோனாவுக்கான சிகிச்சை முறையில் ஆயுர்வேத மருத்துவ முறைகளின் தாக்கம் குறித்த அறிவியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் கொரோனா தடுப்பு பணிக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு முதல் கட்டமாக ரூ.3000 கோடி நிதி வழங்கப்பட்டுவிட்டன. 3 மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் இந்த நிதியை முழுவதுமாக பயன்படுத்திவிட்டன.

தடுப்பூசி சோதனைகள்
கொரோனா தடுப்பூசிக்கான முதல் கட்ட பரிசோதனை நிறைவடைந்துவிட்டது. அடுத்த கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் 3-வது கட்ட பரிசோதனைகளும் தொடங்க உள்ளன.

பெலுடா விரைவில் அறிமுகம்
கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படும். 2000 நோயாளிகளுக்கு ஏற்கனவே பெலுடா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனாவை 98% துல்லியமாக பெலுடா சோதனைகள் கண்டுபிடித்திருக்கின்றன. பெலுடா பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் பெங்களூரில் உள்ள அணுசக்தி துறையின் உயிரியல் தேசிய மையம் ஆகியவை ஒப்புதல் வழங்கி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications