வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் விரைவில் வாக்களிக்கும் வசதி? இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம்
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் விரைவில் வாக்களிக்கும் வசதியை அமல்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.
தலைநகர் டெல்லியில் 2022 ஆண்டு பிரிவில் ஐ.எப்.எஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறுபவர்கள் மத்தியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாடினார். 'இந்தியா-ஜனநாயகங்களின் தாய் மற்றும் தேர்தல் கமிஷனின் பங்கு' என்ற தலைப்பில் ராஜீவ் குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆன்லைன் மூலமாக வாக்குரிமை அளிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்பது நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் கோரிக்கை என்பதால் அதை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். என்று ராஜீவ் குமார் கூறினார்.
இது தொடர்பாக மேலும் ராஜீவ் குமார் கூறியதாவது:- இந்தியவில் நடைபெறும் தேர்தல்கள் உலக அளவில் பாராட்டப்படுகிறது. ஜனநாயகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக தற்போது உலக அளவில் கவலை அதிகரித்து வரும் அதே நேரத்தில் , 1952-ம் ஆண்டில் இருந்து இந்தியா வெற்றிகரமாக தேர்தல் நடத்தி வருகிறது. இந்தியாவின் தேசிய வலிமைக்கு இது உதாரணமாக பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள், தேர்தல் நடத்துவதற்கு சவால்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், ஓட்டு போட தகுதியுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டியதற்கான நேரம் வந்து விட்டது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மின்னணு முறையில் அதாவது ஆன்லைனில் ஓட்டு போடும் வசதியை அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.
அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைவது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications