பொருள் என்னும் அணையா விளக்கு... பொருளாதார ஆய்வறிக்கையில் திருக்குறளை சொன்ன நிர்மலா சீதாராமன்
2020-21ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் முன்னோட்டமாகப் பார்க்கப்படும் இந்த ஆய்வறிக்கையில் திருக்குறள் ஒன்று இடம்பெற்றுள்ளது.
டெல்லி: பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடியும் என்ற பொருள்படும் திருக்குறள் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வாறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
கொரோனா பேரிடருக்குப் பின்னர் இந்த வருடம் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கிய கூட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்து அமளி செய்ததால், பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வாறிக்கையில் திருவள்ளுவரின் திருக்குறள் இடம் பெற்றுள்ளது.
திருக்குறள் எழுதியுள்ள 133 அதிகாரங்களில் பொருள் செயல்வகை அதிகாரத்தில் பொருளின் அவசியம் இன்றியமையாமை பற்றி குறட்பாக்கள் எழுதியுள்ளார். 753 குறளில் நம்முடைய துன்பத்தை துரத்த பொருள் என்னும் அணையா விளக்கு வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த குறளை இன்றைய பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடியும் என்பதே இக்குறளுக்கான விளக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த போது இதே போல திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார்.
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து'
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு. நல்ல நாட்டுக்கு உதாரணமாக வள்ளுவர் கூறிய 5 கூற்றுகளும் இந்தியாவுக்கு தற்போது பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.
அதேபோல், அவர் தனது உரையில் ஒளவையாரின் ஆத்திச்சூடியை குறிப்பிட்டு பேசினார். பூமி திருத்தி உண் என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த பெண் கவிஞர், 3000 வருடங்களுக்கு முன்பே விவசாயத்தை பற்றி குறிப்பிட்டிருப்பதாக பெருமை தெரிவித்தார்.
பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள குறளுக்கேற்றாற் போல நாட்டில் நிலவும் பொருளாதார சரிவு, தலைதூக்கியிருக்கும் வேலையின்மை, மருத்துவப் பேரிடர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.