சோனியா காந்தி விடுத்த கோரிக்கை.. டக்கென ஏற்றுக்கொண்ட அமலாக்க துறை! இது நேஷனல் ஹெரால்டு விசாரணை
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியின் கோரிக்கையை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் மாற்றப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகச் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் இருந்ததால் இது சர்ச்சையானது. அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது.

விசாரணை
அமலாக்கத் துறை தொடர்ந்து இருந்த அன்னிய செலாவணி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அந்தச் சமயத்தில் தான் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் கடந்த வாரம் ராகுல் காந்தி மட்டும் விசாரணைக்கு ஆஜரானார். முதலில் மூன்று நாட்களுக்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கொஞ்சம் பிரேக் விட்டு மீண்டும் இரு நாட்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

ராகுல் காந்தி
5 நாட்களில் மொத்தம் 50 மணி நேரம் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் கேள்விகளால் துளைத்து எடுத்து உள்ளனர். இதனிடையே சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்தச் சூழலில் தான், இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

சோனியா காந்தி
இதனிடையே மருத்துவர்கள் பூரண ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளதால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகச் சோனியா காந்தி அவகாசம் கோரி இருந்தார். இது குறித்து காங்கிரஸின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், "சோனியா காந்தியை வீட்டிலேயே ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்க துறைக்கு கடிதம் எழுதியுள்ளார், அவர் முழுமையாகக் குணமடையும் வரை விசாரணையை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்" என்றார்.

ஏற்பு
ராகுல் காந்தி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சோனியா காந்தி இப்போது மருத்துவ காரணங்களால் அவகாசம் கோரி உள்ளார். சோனியா காந்தியின் இந்த கோரிக்கையை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து சோனியா காந்திக்கு விரைவில் புதிய சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அவர் எப்போது மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.












Click it and Unblock the Notifications