டெல்லியில் பதற்றம்.. முதலமைச்சர் கெஜ்ரிவாலை நெருங்கிய ED! தனிச்செயலர் உட்பட 10 பேர் இடங்களில் ரெய்டு
டெல்லி: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்ட விரோத பணிப்பரிமாற்ற வழக்கில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் குற்றம்சாட்டப்பட்ட அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்புடைய 10 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ரூ.30 கோடி மதிப்பிலான டிஜேபி ஒப்பந்தங்களை வழங்கியதில் முறைகேடுகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பாக அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து டெல்லி பாஜக செயலாளர் கபில் மிஸ்ரா தெரிவிக்கையில், "அர்விந்த் கெஜ்ரிவால் கும்பலின் ஊழல் உண்மையின் அழுக்கும் நாற்றமும் என்பது நாஜப்கர் சாக்கடையை விட மோசமானது.
ஒவ்வொரு துறையில் ஊழல்களும் முறைகேடுகள் நடைபெற்று இருக்கின்றன. அதன் உண்மை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டு இருக்கின்றன. தண்ணீரிலும் மருந்துகளிலும் ஊழல் செய்வது வெட்கக்கேடான செயல். ஊழல் வாதிகளுக்கான ஒரே இடம் சிறை." என்றார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சியில் இணைவதற்காக பாஜக பணம் தருவதாக பேரம் பேசியதாக கடந்த வார இறுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிஷி ஆகியோர் இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது.
கடந்த சனிக்கிழமை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 5 வது முறையாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலையில் அவர் மீது நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்தது. இந்த வழக்கு கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் இந்த அமலாக்கத்துறை சோதனை டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications