செந்தில் பாலாஜி வழக்கு..சிறப்பு புலனாய்வு விசாரணை..சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..பழனிச்சாமி கமெண்ட்
டெல்லி: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இது முக்கியமான தீர்ப்பு என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ததுடன், தொடக்கத்திலிருந்து விசாரிக்க உத்தரவிட்டது.

ஆனால், வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது. அதேபோல, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இன்று தீர்ப்பு அளித்தனர். அதில் வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால் செந்தில் பாலாஜிக்கு எந்த சிக்கலும் இல்லை. பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி வழக்கில் தொடர்புடைய செந்தில் பாலாஜி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணையை தொடர வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். சிபிசிஐடிக்கு எதிரான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.
இதனிடையே இந்த வழக்கு விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு முக்கியமான தீர்ப்பு ஒன்று வந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு தீர்ப்பு வந்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு வெளி வந்திருக்கிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்கு தேவைப்பட்டால் கூடுதல் விசாரணை செய்யலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதே வழக்கில் லஞ்ச ஒழிப்பு தடை சட்டத்தின் படியும் வழக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கை விசாரிக்க இருந்த தடை நீக்கப்பட்டு தொடர்ந்து விசாரிக்கலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கால தாமதம் ஏற்பட்டால் சிறப்பு புலானாய்வு குழுவை நியமித்து வழக்கை விரைவாக தொடர்ந்து நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications