ஓபிஎஸ்ஸுக்கு இதிலும் பின்னடைவா?.. டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி.. பிரதமரை சந்திக்கிறாரா?
டெல்லி: அதிமுகவில் தொடர் வெற்றிகளை குவித்த மகிழ்ச்சியுடன் இன்று டெல்லிக்கு பயணம் செய்கிறார் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை நோக்கி இரு தலைமைகள் நடத்திய யுத்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி கண்டார். அதிமுக பொதுக் குழுவுக்கு தடை முதல் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வரை அனைத்திலும் வெற்றியை ருசித்துள்ளார்.
ஓபிஎஸ்ஸிடம் இருந்த அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்புகளை போராடி தன்னால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனுவாசனுக்கு பெற்றுக் கொடுத்தார்.
Recommended Video

4 மாதங்களில்
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை பெற்றுக் கொண்டார். இன்னும் 4 மாதங்களில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட போகும் மகிழ்ச்சியில் எடப்பாடி உள்ளார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

பாஜக கூட்டணி
இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். இவர் வரும் 25 ஆம் தேதி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கிறார். இந்த நிலையில் ஏற்கெனவே குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் 25 ஆம் தேதி முடிவடைகிறது.

பிரிவு உபசார விழா
இதனால் அவருக்கு டெல்லியில் நாளை பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார். அப்போது திரௌபதி முர்முவின் பதவியேற்பிலும் அவர் கலந்து கொள்கிறார்.

3 முதல் 4 நாட்கள்
3 முதல் 4 நாட்கள் வரை டெல்லியில் முகாமிடும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் சந்தித்து பேசவுள்ளதாக தெரிகிறது. சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கடந்த முறை டெல்லி சென்றும் பிரதமரை சந்திக்க முடியவில்லை. இதனால் இந்த முறை சென்னையில் வைத்து பிரதமரை சந்தித்து எப்படியாவது அதிமுக உள்கட்சி பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தார்.

ஓபிஎஸ்ஸை முந்தும் எடப்பாடி பழனிச்சாமி
ஆனால் எல்லா விஷயங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி முந்துவதை போல் பிரதமரை சந்திக்கும் விஷயத்தில் ஓபிஎஸ்ஸை அவர் முந்திக் கொண்டு சந்திக்க செல்கிறார். இதன் மூலம் சென்னை பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்ஸுக்கு நேரம் கிடைத்தாலும் அவரது கோரிக்கைகள் கேட்கப்படாது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications