முதல்வர் ஸ்டாலின் செல்லுமிடமெங்கும் வரவேற்பு... எடப்பாடிக்கு பொறாமை என்கிறார் தங்கம் தென்னரசு
முதல்வரின் டெல்லி பயணம் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
டெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் வரவேற்பை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். டெல்லியில் முதல்வருக்குக் கிடைக்கும் மரியாதையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி அவதூறு பேசி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவால திறப்பு விழா நாளை ( ஏப்- 2) நடைபெறுகிறது. திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து இன்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.
தன்னையும், தன் குடும்பத்தையும் பிரதமர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தங்கம் தென்னரசு
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வரின் டெல்லி பயணம் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டின் நலனுக்காகவே முதல்வர் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருவதாக கூறினார். மேலும் தமிழ்நாட்டு நலன் சார்ந்த 14 கோரிக்கைகளை அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் அளித்துள்ளார்.

இலங்கை பிரச்சினை
தமிழக முதல்வர் கோரிக்கைகளை எடுத்துரைத்த போது, அதனை பிரதமர் உன்னிப்பாகக் கவனித்ததை அனைவரும் அறிவர் என்று தெரிவித்தார். இலங்கை பிரச்சனை உள்பட கடல் கடந்து வாழும் தமிழர்களுக்காகவும் மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவசியம் இல்லை
தன்னைக் காப்பற்றிக் கொள்ள எந்த தேவையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று கூறிய அமைச்சர், எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்கள் எல்லோரும் டெல்லி வந்தது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளத்தான். அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகளுக்காகவும், மாநிலத்தின் தேவைகளுக்காகவும் டெல்லி வருகை அமைந்தது இல்லை.

எடப்பாடிக்கு பொறாமை
தற்போது முதல்வர், மாநிலத்தின் தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து வருகிறார்.
டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் வரவேற்பை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் , அவருக்கு கிடைக்கும் மரியாதையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி அவதூறு பேசி வருவதாகவும் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications