அவர் வேண்டவே வேண்டாம்.. அமித் ஷாவிடம் எடப்பாடி முன்வைத்த 3 ‘டிமாண்ட்’.. நேருக்கு நேராக அண்ணாமலை!
டெல்லி : அமித் ஷா, நட்டாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக விவகாரம் தொடர்பாக 3 முக்கிய கோரிக்கைகளை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ்ஸுக்கு பாஜக ஆதரவு தரக்கூடாது என்றும், தேர்தல் ஆணையம் தெளிவான உத்தரவைப் பிறப்பிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், பாஜக உடனான தனது உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்திக் கொள்ளவும், அதிமுக விவகாரத்தில் முழுமையாக தன் பக்கம் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலும் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷா, நட்டா ஆகியோரை ஒன்றாகச் சந்தித்துப் பேசினார்.

தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதால் கொஞ்சம் பிரச்சனைகள் ஓய்ந்தாலும், ஒருபக்கம் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்குகள் காலைச் சுற்றிக்கொண்டே இருப்பதால், இன்னும் பாஜக ஆதரவை எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையொட்டியே, தனது சசாக்களோடு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார் ஈபிஎஸ். இந்தச் சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமித் ஷாவிடம் எடப்பாடி கோரிக்கை : இந்தச் சந்திப்பின்போது அமித் ஷாவிடம் அதிமுக விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சில முக்கிய கோரிக்கைகளை விடுத்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக தலைமை ஆதரவு அளிக்கக்கூடாது, அவருடன் உறவு பாராட்டக்கூடாது என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஓபிஎஸ் அணியினர் திருச்சியில் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தை நடத்தி, தங்கள் பலத்தைக் காட்டினர். ஓபிஎஸ்ஸின் இந்த செயல்பாட்டில் பாஜகவின் கை இருப்பதாக பேச்சுகள் இருக்கின்றன. ஓபிஎஸ்ஸுக்கு பாஜக தலைமை மறைமுகமாக சில உதவிகளைச் செய்து தனக்கு நெருக்கடி கொடுப்பதாக கருதும் எடப்பாடி பழனிசாமி, இதுபற்றி அமித் ஷாவிடம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இனியும் குழப்பம் கூடாது : மேலும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருந்தாலும், இந்த முடிவு நீதிமன்ற தீர்ப்புகளுக்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், இனியும் சிக்கல் தொடருமோ என்ற குழப்பம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது.
எனவே, அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தெளிவான உத்தரவைப் பிறப்பிக்க வழிவகை செய்ய வேண்டும், தேர்தல் நெருங்கும் சூழலில் தனக்கு நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் தான் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட முடியும் என அமித் ஷாவிடம் ஈபிஎஸ் வேண்டுகோள் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலை இப்படி பேசக்கூடாது : மேலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடர வேண்டும், நாம் பிரிந்திருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும், இப்போதிருந்தே கூட்டணியில் இணக்கத்தை பேணினால் தான் தொண்டர்கள் ஒற்றுமையாகப் பணிபுரிவார்கள்.
பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவை சீண்டுவதை தவிர்க்க வேண்டும், பொது எதிரியான திமுகவை விமர்சிப்பதில் நம் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications