ஒரே அடி.. ஓபிஎஸ் தரப்பை நிலைகுலைய வைத்த எடப்பாடி.. தேர்தல் ஆணையத்தில் பரபர மூவ்!
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் சூர்யமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். சூர்யமூர்த்தி, அதிமுக உறுப்பினரே இல்லை, அவரது மனுவை வைத்து எங்களிடம் விளக்கம் கேட்கவே கூடாது என எடப்பாடி பழனிசாமி ஒரே போடாகப் போட்டுள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பி்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.

தேர்தல் ஆணையம் விசாரணை
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் மனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும். தன்னை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடியின் நடவடிக்கை அதிமுகவின் அடிப்படை விதிக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தனக்கே சொந்தம் எனக் குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளார் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி கூடுதல் பதில் மனு
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பதில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், “அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது. உறுப்பினர் இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரம் இல்லை.
குறிப்பாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அப்படி இருக்கும்போது சூர்யமூர்த்தி கடந்த 2013ல் உள்ள உறுப்பினர் அட்டை எண்ணை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளார். அது ஏற்புடையது கிடையாது. ஏனெனில் அந்த ஆண்டுக்கு பின்னர் அவர் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை. எனவே அவர் கட்சியின் உறுப்பினர் கிடையாது.
சூர்யமூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை
சூர்யமூர்த்தி, அதிமுகவுக்கு எதிராக வேறு ஒரு கட்சியின் (எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி) சார்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். இவரை போன்றவர்களால் முகாந்திரம் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கவோ அல்லது அந்த மனுவுக்கு விளக்கம் கேட்டிருக்கவோ கூடாது.
சூர்யமூர்த்தியை பொறுத்தவரை அதிமுகவுக்கு எதிராக வழக்கு தொடுப்பது புதிது கிடையாது. ஏற்கனவே இவர் தாக்கல் செய்துள்ள வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உகந்தது கிடையாது என்று தெரிவித்து கடந்த 2021 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்துள்ளது. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது.
எடப்பாடி ஒரே போடு
மேலும் கட்சியின் உள்விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது. இதனை நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. அதேபோன்று கட்சி உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பாக இந்த மனுதாரர் கோரியுள்ள நிவாரணங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவையும் கிடையாது என்பதை ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
சூர்யமூர்த்தியின் வழக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருவரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி பதில் மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் மூலம், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான முடிவையே எடுக்கக்கூடும் எனப் பேச்சுகள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications