அமித்ஷாவை பார்க்கும் முன்பு.. டெல்லியில் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்த எடப்பாடி.. கூட யாருனு பாருங்க
டெல்லி: டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். அதற்கு முன்பாக துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருடன் அதிமுகவின் மூத்த தலைவர்கள் இருந்தனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று அவர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார்.

இந்த சந்திப்புக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து கூறினார். தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவின் ராஜ்யசபா எம்பிக்கள் அவருக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
சிபிஆர் உடன் சந்திப்பு
கடந்த 9 ம் தேதி தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பிறகு கடந்த 12ம் தேதி துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்காத இன்று டெல்லியில் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் மூத்த தலைவர்கள் இருந்தனர்.
உடனிருந்தது யார் யார்?
அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சிவி சண்முகம், இன்பதுரை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி வேலுமணி உள்பட இன்னும் சில தலைவர்கள் உடனிருந்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்.
அமித்ஷா உடன் சந்திப்பு
இந்த சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்தது. அதன்பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் தனித்தனி கூட்டணி அமைத்து களமிறங்கியது. ஆனால் இருகட்சிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
குழப்பத்துக்கு நடுவே சந்திப்பு
தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து ஓ பன்னீர் செல்வம் அணி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறி உள்ளது. இது போதாது என்று செங்கோட்டையன் அதிமுகவில் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று கூறினர். இதனால் செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதன்பிறகு அமித்ஷாவை டெல்லியில் செங்கோட்டையன் சந்தித்தார்.
கவனம் பெறும் சந்திப்பு
இந்நிலையில் தான் இன்று எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். தமிழகத்தின் அரசியல் சூழல், கூட்டணி நிலவரம், தலைவர்களின் நிலைப்பாடு, திமுகவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக விவாதிக்க உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications