தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய முதியவர்.. ரயிலை நிறுத்தி எழுப்பிவிட்டு சென்ற லோகோ பைலட்.. வீடியோ
டெல்லி: ரயில்வே தண்டவாளத்தில் குடையை விரித்து வைத்த படி அசந்து தூங்கிய நபரை, ரயில்வே லோகோ பைலட் வந்து எழுப்பி விடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெட்ரூமில் படுத்து உறங்குவது போல அந்த நபர் தண்டவாளத்தில் ஹாயாக தூங்கிக்கொண்டிருந்ததும், ரயிலை நிறுத்தி லோகோ பைலட்டே முதியவரை எழுப்பிவிடும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் ரயில்வே தண்டவாள பகுதிக்கு செல்வது சட்டப்படி குற்றமாகும். ஆனாலும் அஜாக்கிரதையாக தண்டவாளங்களை கடந்து சென்று விபத்துக்களில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழக்கும் சம்பவங்கள் தினம் தோறும் இந்தியாவில் எங்கேயாவது ஒரு மூலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்பாக சில நேரங்களில் நெஞ்சை பதற வைக்கும் அளவுக்கு பரபரப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியாகும்.

இந்த நிலையில், இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. ரயில்வே தண்டவாளத்தில் அசந்து தூங்கும் ஒரு நபரை, ரயில்வே லோகோ பைலட், ரயிலில் இருந்து இறங்கி வந்து எழுப்பி விட்டு செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வியக்க வைக்கும் படியாக நடந்துள்ள இந்த சம்பவம் எங்கே நடைபெற்றுள்ளது என்பது பற்றி இங்கே பார்ப்போம்..
உத்தர பிரதேசத்தில் பிரக்யாராஜ்ஜில் - பிரதாப்கர் ரயில் வழித்தட பகுதியில் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மயூ அய்மா ரயில்வே கிராசிங்க் அருகே வந்த போது, தண்டவாளத்தில் கருப்பு உருவத்துடன் எதோ இருப்பது போல தெரிந்துள்ளது. இதனால் ரயிலை ஸ்லோ ஸ்பீடில் லோகோ பைலட் இயக்கினார். அப்போது தான் தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் குடையுடன் படுத்து உறங்கி கொண்டு இருந்துள்ளது தெரிந்துள்ளது.
ரயில் கிட்டே நெருங்கி வந்த போதும், அதை கவனிக்காமல் அந்த முதியவர் குறட்டை போட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதனால் ரயிலை நிறுத்திய லோகோ பைலட் ரயிலில் இருந்து இறங்கி வந்து அந்த நபரை எழுப்பி விட்டார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழித்த அந்த நபர், ரயில் அருகில் வந்து நிற்பதை கவனித்த சற்று அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
அவர் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து சென்ற பிறகு, ரயில்வே லோகோ பைலட் பிரக்யாராஜ் நோக்கி ரயிலை எடுத்து சென்றார். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ரயில்வே லோகோ பைலட்டின் செயலை பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள். சில நெட்டிசன்கள் ஜாலியாகவும் பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இந்த லோகோ பைலட்டை எமதர்ம ராஜா ஒரு நாளும் மறக்க மாட்டார்" என பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications