இன்னும் சில நாட்களில் வாக்குப்பதிவு.. தொடர்ந்து குறையும் கொரோனா! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
டெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், பிரசார கட்டுப்பாடுகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்.10ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச் 10இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஓமிக்ரான் கொரோனா காரணமாக 5 மாநில தேர்தல் பரப்புரைகளுக்குத் தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.

தேர்தல் ஆணையம்
கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் தான் டெல்டா கொரோனாவால் நாட்டில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. தேர்தல் பரப்புரைகள் காரணமாகவே டெல்டா கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் இந்த முறை தேர்தல் ஆணையம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,

முக்கிய அறிவிப்பு
தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே பரப்புரைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகளை கொரோனா பரவல் நிலையைப் பொறுத்துத் தேர்தல் ஆணையம் அவ்வப்போது மறுபரிசீலனையும் செய்து வருகிறது. இந்தச் சூழலில் தேர்தல் பரப்புரைகளுக்கு இன்று தேர்தல் ஆணையம் சில கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த தளர்வுகளை அறிவித்துள்ளது.

தளர்வுகள்
தேர்தல் பரப்புரைகளில் அதிகபட்சம் எத்தனை பேர் கலந்து கொள்ளலாம் என்பது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி உள்ளரங்குகளில் நடைபெறும் பரப்புரை கூட்டங்களுக்கு மொத்த இருக்கைகளில் 50% வரையும் வெளிப்புறம் மைதானங்களில் நடைபெறும் பரப்புரை கூட்டங்களுக்கு மொத்த இருக்கைகளில் 30% வரையும் மக்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்தக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எதற்குத் தடை
அதேநேரம் பாதயாத்திரை, வாகனப் பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அதிகபட்சம் 20 பேருடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதையும் வேக்சின் பணிகள் தீவிரமாக நடைபெற்றும் வருவதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று நாட்டில் 1,27,952 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்களும் 13 லட்சமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக கொரோனா பாசிட்டிவ் விகிதமும் நாட்டில் 7.9% ஆகக் குறைந்துள்ளது. இது நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவால் ஏற்பட்ட அலை குறைந்து வருவதையே காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications