ஜூன் 25ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், 3 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள சிபிஐ மாநிலச் செயலாளர் பெனாய் விஸ்வம், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் எளமரம் கரீம், கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் கே. மணி ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, 3 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். 7 கட்டங்களாக நடைபெற்று வரும் லோக்சபா தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. அதைத்தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதன்பிறகு, ராஜ்யசபா தேர்தலை நடத்த இருக்கிறது தேர்தல் ஆணையம். ஜூன் 6ஆம் தேதி 3 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். ஜூன் 13ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை ஜூன் 14ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 18.

ஜூன் 25ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கேரளாவின் 3 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலையே, ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிராவில் ஒரு ராஜ்யசபா எம்.பி பதவிக்கான இடைத்தேர்தலும் ஜூன் 25-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரபுல் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications