சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய பிரச்சாரங்களை பாஜகவினர் உடனடியாக நிறுத்த வேண்டும்.. தேர்தல் ஆணையம்
டெல்லி: மதம், சாதி, மொழி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய பிரச்சாரங்களை பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 21ம் தேதி பேசுகையில், தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய' காங்கிரஸ் விரும்புவதாக கூறினார். மேலும் முன்பு, அவர்களது (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறியிருந்தது. அதாவது சொத்துக்களை வசூலித்த பிறகு, அதை யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்? அதிக குழந்தை பெற்றவர்களுக்கு. நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா?

தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு 'சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு' என்று சொன்னதைப்போல பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது" என்று பிரதமர் மோடி சர்ச்சைச்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கடும் எதிர்வினை ஆற்றியது.
அதேநேரம் ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் பிரதமர் நரேந்திர மோடி மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அப்படி நோட்டீஸ் அனுப்பிய சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு, ஜாதி, சமூகம், மொழி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் செய்வதிலிருந்து பாஜக விலக வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஜேபி நட்டா உள்பட பாஜகவின் 'நட்சத்திர பிரச்சாரகர்கள்' மத மற்றும் வகுப்புவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதிலிருந்து விலக வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய பிரச்சார உரைகளை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. . ஆனால், மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரைக் குறிப்பிட தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பியதுபோல், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தாக்கல் செய்த புகார்களுக்கு பதிலளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாதுகாப்புப் படைகளை அரசியலாக்க வேண்டாம் என்றும் ராணுவ அமைப்புகள் குறித்து பிளவுபடுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் காங்கிரஸிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.
காங்கிரஸின் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் மற்றும் வேட்பாளர்கள், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் ஒழிக்கப்படும் அல்லது அரசியல் அமைப்பு சட்டம் மாற்றப்படும் என்பது போன்ற தவறான அறிக்கைகளை வெளியிடுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
மொத்தத்தில் காங்கிரஸ் , பாஜக என இரு தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சுக்கள் சர்ச்சை ஏற்படாத வகையில் திருத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications