தபால் வாக்கு எண்ணிக்கை முறையில் மாற்றம்.. தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு! என்ன காரணம்?
டெல்லி: பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்குச் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது வாக்குப்பதிவு இயந்திரங்களின் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே தபால் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தேர்தல் ஆணையத்தின் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ராகுல் காந்தி சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதாவது நாட்டில் தேர்தல்களில் வாக்கு திருட்டு நடப்பதாகவும் அதற்கு எதிராகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் சாடியிருந்தார்.

புதிய முறை
இது ஒருபக்கம் இருக்க இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் பதிவான வாக்குகளின் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே, தபால் வாக்குகள் எண்ணும் பணி முழுமையாக முடிவடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
புதிய விதிகள் என்ன
வழக்கமாகக் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். அதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கும். முந்தைய விதிகளின்படி, தபால் வாக்குகள் எண்ணும் பணிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணிக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. இதனால் சில சமயங்களில், தபால் வாக்குகள் முழுமையாக எண்ணப்படுவதற்கு முன்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்தன.
அதேநேரம் இப்போது தபால் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களித்தனர். ஆனால், இப்போது உடல்நலக்குறைவால் இருப்போர், முதியோர் ஆகியோருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தபால் வாக்குகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணையம்
இந்தச் சூழலில் தான் வாக்கு எண்ணிக்கையில் ஒரு சீரான தன்மையையும், தெளிவையும் உறுதிப்படுத்தும் நோக்கில், தேர்தல் ஆணையம் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது. புதிய விதிகளின்படி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் பதிவான வாக்குகளின் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே, தபால் வாக்குகள் எண்ணும் பணி முழுமையாக முடிவடைய வேண்டும்.
தெளிவான விளக்கம்
தபால் வாக்குகளை முழுமையாக எண்ணி முடித்த பிறகே, இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும். அதாவது ஒரு தொகுதிக்கு 20 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது என வைத்துக் கொள்வோம். 19 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டால், அதன் பிறகும் தபால் வாக்கு முழுமையாக எண்ணப்படாமல் இருந்தால் முதலில் அதை எண்ணி முடிக்க வேண்டும். அதன் பிறகே 20வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்க வேண்டும். பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications