அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்? வரவு செலவு கணக்குகளை ஏற்றது!
டெல்லி: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் அதிமுகவின் வரவு செலவு கணக்கு விவரங்களை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் யார் உண்மையான அதிமுக என முட்டி மோதுகின்றன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த அதிமுகவின் வரவு- செலவு கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் ஏற்காமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் ஏற்று இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிமுக அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை வானகத்தில் அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ல் பொதுக்குழுவை கூட்டியது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பொதுக் குழு கூட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பெஞ்ச், நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்; அத்துடன் ஜூலை 11-ல் ந் தேதி இபிஎஸ் கோஷ்டி நடத்திய பொதுக்குழு செல்லும் எனவும் தீர்ப்பு அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது; அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தோம். ஆனால் பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த திருத்தங்களை பதிவேற்றம் செய்யவில்லை. ஆகையால் இந்த பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கின் விசாரணை ஜனவரி 4-ந் தேதி நடைபெற உள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கையை ஏற்று, அவர் தரப்பு தாக்கல் செய்த கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. ஜனவரி 4-ந் தேதி நடைபெறும் விசாரணையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு முக்கியமானதாக இடம்பெறும். இதனடிப்படையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications