தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம்
டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் எதுவரை பெயர் சேர்க்கலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி ஆகும். தமிழகத்தில் பொதுவாக தேர்தல் தேதி பிப்ரவரி மாதத்திலேயே அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதற்கான காரணம் எஸ்ஐஆர் என்கிறார்கள்.

அதாவது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம், இதன்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380 (5.67 கோடி). அவர்களில் பெண் வாக்காளர்கள்: 2,89,60,838, ஆண் வாக்காளர்கள்: 2,77,38,925, மூன்றாம் பாலினத்தவர்: 7,617 ஆகும்.
தமிழகத்தில் எஸ்ஐஆருக்கு பிறகு மொத்தம் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எஸ்ஐஆருக்கு பிறகு தமிழகத்திற்கான இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியான நிலையில் தேர்தலில் வாக்களிக்க கூடுதல் வாய்ப்பை பெயர் சேர்க்கப்படாத தகுதியுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 6ஆம் தேதியாகும்.
எனவே அதற்கு முன்பு 10 நாட்கள் என்றால் மார்ச் 27ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலோ விண்ணப்பிக்கலாம்.
இதில் சேர்க்கப்படும் வாக்காளர்களுக்காக துணை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். அதில் இடம் பெற்றவர்களும் வாக்களிக்க முடியும். மார்ச் 27ஆம் தேதிக்கு பிறகு என்றாலும் கூட பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் வரும் தேர்தலில் வாக்காளிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
ஏனென்றால் தேர்தல் முடிந்த பிறகுதான் அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகம் முழுவதும் கணக்கில் வராத பணம் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படைகள் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 1.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications