தமிழ்நாடு, புதுவை உள்பட 5 மாநிலங்களுக்கு.. தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு
டெல்லி: தமிழ்நாடு, புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 5 மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மிக முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு உள்பட விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி செய்யும் அரசு அதிகாரிகளை உடனடியாக பணியிட மற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாடு, புதுவை, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தல் நடத்தும் பணிகளில் உள்ள அதிகரிகள் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியில் இருக்க கூடாது என்ற விதியை தேர்தல் ஆணையம் கடைபிடித்து வருகிறது.
பணியிட மாற்றம் செய்ய வேண்டும்
அதன்படி, சொந்த மாவட்டத்தில் பணி செய்து வரும் அதிகாரிகள் ஒரே மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் அல்லது தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மே 31 ஆம் தேதிப்படி மூன்று ஆண்டுகள் பணியை நிறைவு செய்பவர்கள் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதாவது ஒரு அதிகாரி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றால் அவர் சொந்த மாவட்டமாக இருந்தாலோ அல்லது திருநெல்வேலியில் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலோ.. உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம் ஆகும்.
தேர்தல் ஆணையம் உத்தரவு
இது தவிர மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், காவல் ஆய்வாளர், காவல் துணை ஆய்வாளர் அதற்கும் மேல் உள்ள அதிகாரிகள் ஆகியோரை கடந்த சட்டமன்ற தேர்தல் அதாவது 2021 சட்டமன்ற தேர்தல், அதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் அல்லது மாவட்டங்களில் பணியாற்றியவர்களை மீண்டும் அதே இடத்திற்கு பணியமர்த்தக்கூடாது என்பதையும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இதுபோன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பிப்பது வழக்கம். எனவே தமிழகம், கேரளா உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல்
மருத்துவர்கள், பொறியாளர்கள் உளிட்ட தேர்தல் பணி சாராத அரசு அலுவலர்களுக்கு இது பொருந்தாது. அதேபோல, மே 31 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தது. தற்போது எஸ்.ஐஆர் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் வரை பணியில் தொடரலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அதன்பிறகு பணியிட மாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications