உபி பாஜகவினருக்கு ஹரியானாவில் ஓட்டு.. மோடி - அமித்ஷாவுடன் சேர்ந்துள்ளதாம் தேர்தல் ஆணையம் - ராகுல்
டெல்லி: ‛‛உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜகவினருக்கு ஹரியானாவில் ஓட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் நியாயமான தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் சமயத்தில் பாஜக என்ன செய்கிறது? என்பதற்கு முற்றிலும் தெளிவான சான்றாக இது உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் கூட்டு சேர்ந்து இந்திய ஜனநாயகத்தை அழிக்கிறது'' என்று ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார்.
டெல்லியில் இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் மீது மீண்டும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்தார். வழக்கம்போல் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஹரியானா வாக்காளர் பட்டியலில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பேசினார்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: தேர்தல் ஆணையம் நியாயமான தேர்தலை நடத்த விரும்பவில்லை. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஹரியானாவில் வாக்காளர்களாக சேர்ந்துள்ளனர். தேர்தல் சமயத்தில் பாஜக என்ன செய்கிறது? என்பதற்கு முற்றிலும் தெளிவான சான்றாக இது உள்ளது. பாஜகவை சேர்ந்தவர்கள் உத்தர பிரதேசம், ஹரியானாவில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.
இதனால் தேர்தல் ஆணையம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் கூட்டு சேர்ந்து இந்திய ஜனநாயகத்தை அழிக்கிறது. இந்த முறை தேர்தலில் வாக்கு திருட்டு என்பது தொழில் மயமாக்கப்பட்டுள்ளது. பீகாரிலும் அதனை செய்வார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது நீங்கள் ஏன் இதனை கண்டுபிடிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் வாக்காளர் பட்டியல் கடைசி நேரத்தில் தான் வருகிறது. இப்போது பீகாரின் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்த வேளையில் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை ஓடவிட்டார். அதில் கேரளா பாஜக துணை தலைவர் பி கோபாலகிருஷ்ணன் பேசுகிறார். தேர்தலில் வெற்றி பெற வாக்காளர் பட்டியலில் அதிகமான வாக்காளர்களை சேர்ப்பேன் என்று அவர் கூறுகிறார். அதனை சுட்டிக்காட்டி பாஜகவும், தேர்தல் ஆணையும் ஓட்டு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications