‛‛பானை சின்னம் கிடையாது’’.. உறுதியாக கூறிய தேர்தல் ஆணையம்.. திருமாவின் விடுதலை சிறுத்தைகள் ஷாக்
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உறுதியாக கூறிவிட்டது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தலில் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. இந்த கட்சிக்கு திமுக கூட்டணியில் மீண்டும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இதையடுத்து வரும் லோக்சபா தேர்தலிலும் சிதம்பரம், விழுப்புரம் லோக்சபா தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் சிட்டிங் எம்பி திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் எம்பி ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்தது. பொதுவாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் நிரந்தரமாக சின்னம் வழங்கப்படும். ஆனால் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கிறது. இதனால் தேர்தல் சமயங்களில் அந்த கட்சி தங்களுக்கான சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தமட்டில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலிலும் அவரது கட்சி பானை சின்னத்தில் களமிறங்கி இருந்தனர். இதனால் வரும் லோக்சபா தேர்தலிலும் பானை சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதில் முடிவு எடுக்க தாமதமானது.
இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது பற்றி இன்று முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்துள்ளது. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்துக்கு பதில் புதிய சின்னத்தில் போட்டியிட உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னத்தை வசப்படுத்த வெளி மாநிலங்களில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. அண்டை மாநிலங்களான தெலங்கானாவில் 10, கர்நாடகாவில் 6, கேரளாவில் 5, மகாராஷ்ராவில் 1 லோக்சபா தொகுதிகளில் விசிக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது பானை சின்னம் வழங்கப்படாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் வேறு சின்னத்தில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications