மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்: ரூ.538 கோடி ரொக்கம், 'சரக்கு', நகைகள் பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்!
டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இதுவரை ரூ538 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானங்கள் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக ரூ280 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானங்கள் பிடிபட்டுள்ள்ன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரு மாநிலங்களிலும் உச்சகட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தீவிர வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் இதுவரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 538 கோடி மதிப்புள்ள ரொக்கம், இலவசங்கள், மதுபானங்கள், மருந்துகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் போன்றவற்றை தேர்தல் ஆணையத்தின் கீழ் உள்ள அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன.
இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்டில் இதுவரை ரூ.158 கோடி மதிப்புள்ள ரொக்கமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2019-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடும்போது மகாராஷ்டிராவில் தற்போது ரூ.103.61 கோடியும், ஜார்க்கண்டில் ரூ.18.76 கோடியும் அதிக தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications