தேர்தல் வாக்குறுதிகளில்.. இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனு! உடனே விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
முன்னதாக கடந்த 19ம் தேதி தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நடத்திய விசாரணையில், பணக்காரன் - ஏழை என்ற பாகுபாடுகூட இல்லாமல், கண்மூடித்தனமாக இலவசங்களை வாரி வழங்கும் மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்திருந்தது. தேர்தலைக் குறிவைத்து, பொது நிதியைப் பற்றி கவலைப்படாமல் அரசியல் நடத்துகிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தது.

வருமானம் அதிகமாக இருக்கும் மாநிலமாக இருந்தாலும், விவேகமற்ற இலவசங்களை அளிப்பதை விட, நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேபோல வருவாய் பற்றாக்குறையில் இயங்கும் மாநிலங்கள்கூட, இலவசங்களுக்கு நிதியைத் தாராளமாக செலவழிக்கின்றன என்று தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்திருந்தது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை அறிவிக்கவும், பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்கு தடைகோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், "நேற்று கேரளா மாநிலத்தில் தேர்தல் வருகிறது, அதனால் இது போன்ற ஒரு மனுவை தொடர்ந்தார்கள். தற்போது தமிழ்நாடு தேர்தல் வருகிறது. எனவே இந்த மனுவை நீங்கள் தாக்கல் செய்கிறீர்கள். இதை தற்போது ஏற்க முடியாது. தேர்தல் முடிந்த பின்பாக வழக்கை எடுத்து விசாரிக்கலாம். தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications