நினைச்ச மாதிரி உடையாத ”இந்தியா” கூட்டணி.. மிரண்டு போன பாஜக.. சிலிண்டர் விலை குறைப்பின் பின்னணி!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ200 குறைத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அதே நேரத்தில் வலிமையாக உருவெடுத்து நிற்கும் "இந்தியா" கூட்டணி, 5 மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என அத்தனையையும் கணக்கு போட்டுதான் அதிருப்தி அலையை தணிக்கும் முயற்சியாக சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலையும் அசால்ட்டாக வென்றுவிடுவோம்; மீண்டும் மத்தியில் நமது ஆட்சிதான் என பாஜக படு கேசுவலாக இருந்தது. ஆனால் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணி என்பது உருவாகி பாஜகவின் இந்த கனவுகளுக்கு ஆட்டம் தரத் தொடங்கியது.

"இந்தியா" கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் மாநிலங்களில் பரம எதிரிகளாக நிற்கின்றன; இதனால் "இந்தியா" கூட்டணி ஒன்றிரண்டு மாதங்களில் உடைந்து சிதறும் என்பதுதான் பாஜகவின் கணக்காக இருந்தது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளை இணைத்து வலிமையான அணியாக "இந்தியா" கூட்டணி உருவாகி நிற்கிறது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து பேசவே மறுத்த மத்திய பாஜக அரசை, நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் வாய் திறக்க வைத்து சாதித்து காட்டியது "இந்தியா" கூட்டணி.
இப்போது 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல், அடுத்ததாக 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் என பாஜகவுக்கு அக்னி பரீட்சை காலம் தொடங்கிவிட்டதையே காட்டி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் கோசி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளரை ஆதரித்து "இந்தியா" கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. இது லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்ட பார்முலா. 5 மாநிலங்களில் பாஜக எளிதாக வெல்லும் சாத்தியம் உள்ள மாநிலம் எதுவும் இல்லை என்பது களநிலவரம். அத்தனை கருத்து கணிப்புகளும் கடும் போட்டி நிலவும், சவாலாக இருக்கும், பாஜக ஆட்சியை இழக்கும் என்றெல்லாம் கூறி வருகின்றன.

இத்தகைய நெருக்கடிகள், சவால்களில் இருந்து சற்றேனும் நெருக்கடியை தளர்த்தியாக வேண்டிய கட்டாயம் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இருந்து வந்தது. இதனால்தான் இப்போது சிலிண்டர் விலையை ரூ200 குறைத்துள்ளது. 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும் போது இருந்த சிலிண்டர் விலை இப்போது 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த ரூ200 குறைப்பு அப்படி ஒன்றும் சாமானியர்களால் கொண்டாடித் தீர்க்கக் கூடிய அறிவிப்பு இல்லைதான். எனினும் இதனை ஒரு தேர்தல் பிரசார யுக்தியாக மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்திருக்கிறது. ஆனாலும் உயர்த்தியது ஏன்? உயர்த்தியது எவ்வளவு? குறைத்தது எவ்வளவு? என எதிர்கேள்விகள் கேட்டு மத்தியில் ஆளும் பாஜக அரசை பந்தாடிக் கொண்டிருக்கின்றன "இந்தியா" கூட்டணி எதிர்க்கட்சிகள்.












Click it and Unblock the Notifications