தேர்தல் பத்திரம்- நிதி தருவது யார் என அறியும் உரிமை மக்களுக்கு இல்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி யார் தருகிறார்கள் என அறியும் உரிமை மக்களுக்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் அதிரடியான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
'தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி' என்கிற விவகாரம் அண்மைகாலமாக விஸ்வரூபம் எடுத்து பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் இதன் முழு விவகரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வகை செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். ஆனால் 2018-ல் இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்த மத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை என மாற்றிவிட்டது.

பெருமளவு நிதி பெற்ற பாஜக: இந்த திருத்தத்துக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் கல்லா பெட்டி பெருமளவு நிரம்பியது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன. இதில் பெருமளவு நிதி பெற்றது மத்தியில் ஆளும் பாஜகதான் என்கின்றன புள்ளி விவரங்கள்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்: இந்த தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதா சார்ந்தது; லோக்சபா ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இதன் அம்சங்கள், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் 2109-ல் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நிலுவையில் இருந்த இருந்த பொதுநலன் வழக்குகள் மீதான விசாரணை நாளையும் நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க இருக்கிறது.
மத்திய அரசு வாதம்: இந்த வழக்கில் நாளை விசாரணை நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறவர்கள் யார் என்கிற விவரத்தை அறியக் கூடிய உரிமை பொது மக்களுக்கு கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இப்படியான ஒரு வாதத்தை மத்திய அரசு முன்வைத்திருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications