மருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்
டெல்லி: மருத்துவர்களையும், மருத்துவ துறையை சேர்ந்தவர்களையும் பாதுகாக்க சட்டமன்றத்தில் தனி சட்டம் ஒன்றை இயற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவரை சரமாரியாக தாக்கினார். இதனையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கொல்கத்தாவில் மட்டும் நடைபெற்று வந்த போராட்டம் சிறிது சிறிதாக நாடு முழுவதும் பரவியது. டெல்லி, ஐதராபாத் உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதைத் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக, நேற்று நாடு முழுவதும் பரவலாக நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கான மருத்துவர்கள் ஈடுபட்டனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அடையாள போராட்டம் நடத்தி விட்டு பணிக்கு திரும்புங்கள் என மருத்துவர்களை கேட்டு கொண்டிருந்தார். அமைச்சரது இந்த பேச்சுக்கும் மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே நாளை டெல்லியில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் 14 அரசு மருத்துவமனைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைகளை தவிர்த்து வேறு எந்த பணிகளையும் செய்ய முடியாது என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்
மருத்துவர்கள் போராட்டம் மிக தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு தழுவிய போராட்டத்தில் வரும் 17-ம் தேதி ஈடுபட உள்ளதாக நேற்று இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது. இதனால் வரும் திங்களன்று நாடு முழுவதுமே மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் போராட்டத்தால் நாடு முழுவதும் நோயாளிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர். நிலைமை தீவிரமாகியுள்ளதை அடுத்து மருத்துவர்களை பாதுகாக்க சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்ற அறிவுறுத்தி மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவர்கள் மீது தாக்குல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என, அக்கடிதத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன், மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications