ராகுல் காந்தியை மீண்டும் விசாரிக்க போகும் அமலாக்கத்துறை! பரபரப்பை கிளப்ப வரும் நேஷனல் ஹெரால்டு கேஸ்!
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வரும் தமது வீட்டுக்கும் அமலாக்கத்துறை வரக் கூடும் என ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது நேஷனல் ஹெரால்டு வழக்கு.
நாட்டின் முதலாவது பிரதமரான ராகுல் காந்தியின் கொள்ளு தாத்தா ஜவஹர்லால் நேருவால் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. நேரு ஏற்கனவே தொடங்கிய அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் சார்பில் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டது. அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனமானது 5,000-க்கும் அதிகமான சுதந்திரப் போராட்ட வீரர்களை பங்குதாரர்களாகக் கொண்டது. தேச விடுதலைப் போராட்டத்தில் நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் 1942-ம் ஆண்டு இந்த பத்திரிகைக்கு ஆங்கிலேயர் அரசு தடை விதித்தது. 1947-ம் ஆண்டு இந்த தடை நீக்கப்பட்டது.

நிறுத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு: நாடு விடுதலை அடைந்த பின்னர் பிரதமராக பொறுப்பேற்ற ஜஹவர்லால் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் இயக்குநர் பொறுப்பை ராஜினாமா செய்தார். 2008-ம் ஆண்டு இந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாவது நிறுத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு இணையப் பத்திரிகையாக வெளியிடப்பட்டது.
சு.சுவாமி புகார்: இதனிடையே 2012-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக ஒரு மோசடி புகாரை எழுப்பினார் இன்றைக்கு பாஜகவில் இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி. அதாவது நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை சோனியா காந்தி, ராகுல் காந்தி கைப்பற்றி அதன் ரூ2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க முயற்சித்தனர் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.
என்ன வழக்கு?: 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்ட போது அதை நடத்திய அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ90 கோடி கடன் இருந்தது. 2010-ம் ஆண்டு சோனியா, ராகுல் காந்தியை பங்குதாரர்களாக கொண்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடனை அடைத்து அதன் ரூ2,000 கோடி சொத்துகளை அபகரிக்க முயன்றனர் சோனியா, ராகுல் காந்தி என்பதுதான் புகார்.
ராகுல் காந்தியை கைது செய்ய திட்டமா.. பரபரக்கும் யூகங்கள்.. காங்கிரஸ், பாஜக அனல் பறக்கும் வியூகம்!
2022-ல் 40 மணிநேரம் விசாரணை: இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. 2022-ம் ஆண்டு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்தது. ராகுல் காந்தியிடம் சுமார் 40 மணி நேரம் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது ராகுல் காந்தி கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் காங்கிரஸ் கட்சி நடத்தி இருந்தது.
ராகுலுக்கு மீண்டும் சம்மன்: இந்த நிலையில்தான் கடந்த வாரம், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தமது வீட்டைத் தேடி வரக் கூடும்; மத்திய அரசை தொடர்ந்து விமர்சிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கூறியிருந்தார் ராகுல் காந்தி. இது தொடர்பாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதனால் ராகுல் காந்தி, சோனியா காந்தியை மீண்டும் விசாரிக்க இருக்கிறோம். இருவருக்கும் அடுத்த வாரம் சம்மன் அனுப்ப இருக்கிறோம் என்கின்றன. இதனால் மீண்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கு விஸ்வரூபம் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications