ராகுல் காந்தியை கைது செய்ய திட்டமா.. பரபரக்கும் யூகங்கள்.. காங்கிரஸ், பாஜக அனல் பறக்கும் வியூகம்!
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மீண்டும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராக உள்ளார். நாளை ஆஜராகும் ராகுல் காந்தி கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறதா? என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றன.
5 மாநில சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமை அக்கட்சியில் பல்வேறு மாற்றங்களுக்கான நடவடிக்கைகளை தொடங்கி இருந்தது. அக்டோபர் 2-ந் தேதி முதல் நாடு தழுவிய யாத்திரையை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி வரும் 23-ந் தேதி ஆஜராக உள்ளார். ராகுல் காந்தி கடந்த 3 நாட்களாக டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி பல மணிநேர விசாரணையை எதிர்கொண்டார்.

காங். போராட்டம்
பொதுவாக இத்தகைய விசாரணைகளை ஆர்ப்பாட்டமே இல்லாமல் எதிர்கொள்ளும் காங்கிரஸ். ஆனால் இம்முறை மிகப் பெரும் பரபரப்பை காங்கிரஸ் கட்சியே கிளப்பிவிட்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக ராகுல் விசாரணைக்கு ஒரு புறம் ஆஜராக, இன்னொரு பக்கம் டெல்லி தெருக்களில் மறியல் போராட்டங்களை நடத்தினர் காங்கிரஸ் தலைவர்கள். குறிப்பாக டெல்லி காங்கிரஸ் தலைமையகம் ஒரு போர்க்களமாகவே காட்சி தந்தது. காங்கிரஸ் தலைவர்கள் குண்டு கட்டாக தூக்கிப் போடப்படுவது, சாலை மறியல் போராட்டம், ராகுல் காந்தி ஜிந்தாபாத் முழக்கங்கள், போலீசாரின் தள்ளு முள்ளு கைதுகள் என ரணகளமாகத்தான் இருந்தது டெல்லி வீதிகள்.

ராகுல் காந்தி நாளை கைது?
இன்று ராகுல் காந்திக்கு ஓய்வு கொடுத்திருக்கும் அமலாக்கத்துறை நாளை விசாரணைக்கு வரவழைத்துள்ளது. ஆனாலும் காங்கிரஸ் கட்சி ஓய்வு எடுக்காமல் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை பெரும் பரபரப்புகளுடன் நடத்தி இருக்கிறது. இதனிடையே நாளை வெள்ளிக்கிழமை அமலாக்கப் பிரிவு முன்பாக ஆஜராகும் ராகுல் காந்தி, கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வியும் எழுந்தது. கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான விவாதம் டெல்லியில் நிகழ்ந்தாலும் நாளை வெள்ளிக்கிழமை என்பதால் ராகுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்கிற பொது கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

காங். வியூகம்
அப்படி ராகுல் காந்தி கைது செய்யப்பட்டால் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு அது மிகப் பெரும் உத்வேகத்தையே தரும் என்கின்றனர் சீனியர் ஜேர்னலிஸ்டுகள். 1977-1980 கால கட்டங்களில் எமர்ஜென்சிக்குப் பின்னர் இந்திராவின் கதை முடிந்தது என பேசிய தருணங்களில் அவர் கைது செய்யப்பட்டதன் மூலமே காங்கிரஸ் மீண்டு எழுந்தது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதனையே காங்கிரஸ் ஆதரவு இணையதளங்கள் தொடர்ந்தும் கடந்த சில நாட்களாக எழுதியும் வருகின்றன.

பாஜக கணக்கு
அதேநேரத்தில் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல, காங்கிரஸை பாஜக உசுப்பி விடுவது ஏன்? என்கிற கேள்வி இயல்பாகவே முன்வைக்கப்படுகிறது. ஆனால் பாஜக தரப்போ, காங்கிரஸ் கட்சியின் பலம், பலவீனம் என்ன என்பது அது உறங்கிக் கொண்டே இருப்பதில் தெரியாது. அதுவும் வீதிக்கு வர வேண்டும். யார் யார் ஆக்டிவ்வாக வெளிப்படுகிறார்கள்; காங்கிரஸ் எப்படி தம்மை மீள உருவாக்கம் செய்து கொள்கிறது? என்பதை எல்லாம் எளிதாக புரிந்து கொள்ள இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தேவையானதாகவும் இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தல் களத்துக்கு இந்த ஆட்டம் ரொம்பவே உதவியாகவும் இருக்கப் போகிறது என்கின்ற பூடகமாகவே நகைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications