இந்திய வரலாற்றிலேயே முதல் முறை- ”குற்றவாளி”யாக அரசியல் கட்சி பெயர் சேர்ப்பு.. ஆம் ஆத்மிக்கு தடை?
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் பெயரும் சேர்க்கப்பட இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக குற்ற வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஒரு அரசியல் கட்சியின் பெயரையே சேர்க்கப் போவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது; இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு தடை விதிக்கக் கூடிய சாத்தியம் உருவாகலாம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மணீஷ் சிசோடியா. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குறித்து விசாரித்து வருகிறது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தமக்கு ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் தரக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்தக் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயரையும் சேர்க்கப் போகிறோம். மதுபான கொள்கை முறைகேடு மூலம் ஆம் ஆத்மி கட்சி ஆதாயம் அடைந்துள்ளது. இதில் முக்கிய பங்காற்றியவரே மணீஷ் சிசோடியாதான் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்திய வரலாற்றில் குற்ற வழக்கு ஒன்றில் ஒரு அரசியல் கட்சியின் பெயர் முதல் முறையாக சேர்க்கப்பட இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த தகவலால் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கும் அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஆம் ஆத்மி கட்சி ஆதாயம் அடைந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டுவதை நீதிமன்றம் உறுதி செய்தால் அந்தக் கட்சிக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. வட இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்க்கட்சியாக இருப்பது ஆம் ஆத்மிதான். அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கூட கைது செய்து சிறையில் அடைத்தது மத்திய அரசு. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் இருப்புக்கே உலை வைக்கும் வகையில் கட்சிப் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் போவதாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications