பாஜகவின் சிஸ்டத்திற்கு.. நாட்டை பலியாக்க வேண்டாம்.. இலவச தடுப்பூசி மட்டுமே தீர்வு.. ராகுல் ட்வீட்
டெல்லி: பாஜகவின் சிஸ்டத்திற்கு இந்தியாவைப் பலியாக்கிவிட வேண்டாம் என்றும் நாட்டில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மருந்து நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தடுப்பூசிகளில் பாதியை மத்திய அரசுக்கும் மீதி பாதியை வெளிச் சந்தையில் மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு ஒரு விலையிலும் மாநில அரசுகளுக்கு ஒரு விலையிலும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஒரே நாடு ஒரே சந்தை இருக்கும் போது ஒரே நாடு ஒரே தடுப்பூசி விலை ஏன் இருக்கக் கூடாது எனக் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்திருந்தார்.
குட் நியூஸ்.. இந்தியாவில் சில வாரங்களில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி.. ஒரு டோஸ் மட்டும் போதும்
இந்நிலையில், ராகுல் காந்தியும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசை சாடி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து ராகுல் தனது ட்விட்டரில், "விவாதம் போதும். நாட்டில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இது மட்டுமே முடிவு. பாஜகவின் சிஸ்டத்திற்கு இந்தியாவைப் பலியாக்கிவிட வேண்டாம்" என அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளன.