6 கோடி தொழிலாளர்களுக்கு அடி.. குறைக்கப்பட்டது பி.எப். வட்டி விகிதம்
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப். மீதான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எப். எனப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, எவ்வளவு வட்டி அளிப்பது என்பதை, ஒவ்வொரு ஆண்டும், மத்திய அறங்காவலர் வாரியம் ( சி.பி.டி) நிர்ணயம் செய்யும்.
கடந்த நிதியாண்டில், இந்த வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 2019-20ம் நிதியாண்டுக்கான, வட்டிவிகிதத்தை நிர்ணயிக்க, அறங்காவலர் வாரிய குழு டெல்லியில் கூடியது. தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

வட்டி விகிதத்தை குறைக்கும்படி அப்போது, அறங்காவலர் வாரிய குழுவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும், நிதி அமைச்சக அதிகாரிகள் தரப்பிலிருந்து மிகுந்த நெருக்கடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து 2019-20 ஆண்டிற்கான வட்டி விகிதத்தை, 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் மந்த நிலை நிலவுவதால், வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விலைவாசி அதிகமாக உள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு இது பாதிப்புதான் என்பது தொழிலாளர்கள் தரப்பு குற்றச்சாட்டாக உள்ளது. வட்டி குறைப்பால், நாட்டில் பி.எப். பணம் செலுத்தும், 6 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள்.
2016-17 ஆம் ஆண்டில் 8.65 சதவீத வட்டி வீதத்தையும், 2017-18 ஆம் ஆண்டில் 8.55 சதவீதத்தையும் வட்டியாக வழங்கியது. 2015-16ல் வட்டி விகிதம், 8.8 சதவீதமாக சற்று அதிகமாக இருந்தது. 2013-14 ஆம் ஆண்டில் 8.75 சதவீத வட்டி விகிதமும், 2014-15 ஆம் ஆண்டிலும், 2012-13 ஆம் ஆண்டிலும் 8.5 சதவீதமும் வட்டியாக வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications