பிஎஃப் பணத்தை யுபிஐ-யில் எடுக்கும் வசதி.. இந்த மாதமே வரப்போகும் குட் நியூஸ்.. எவ்வளவு எடுக்கலாம்?
சென்னை: இபிஎஃப் 3.0(EPFO 3.0) திட்டத்தின் மூலம் ஊழியர்கள் தங்களது பிஎஃப் சேமிப்புத் தொகையில் 75 சதவீதம் வரை யுபிஐ மற்றும் ஏடிஎம் வழியாக உடனடியாக எடுக்க முடியும். மேலும், பிஎஃப் கோரிக்கைகளுக்கான தானியங்கி ஒப்புதல் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎஃப்ஓ-வில் ஊழியர்கள் பணத்தை திரும்ப பெறும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் வாரக்கணக்கில் பிஎஃப் பணத்தை திரும்ப பெற காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது சில நாட்களிலேயே நேரடியாக வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு விடுகிறது. இதனை மேலும் எளிமையாக்கும் விதமாக யுபிஐ வழியாக பணம் எடுக்கும் வசதி அமல்படுத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கூறியது. இந்த வசதி, இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்படலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

யூபிஐ, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்கள், விரைவில் வரவிருக்கும் 'EPFO 3.0' டிஜிட்டல் தளத்தின் மூலம் தங்களது பிஎஃப் பணத்தை யுபிஐ செயலிகள் மற்றும் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட ஏடிஎம்கள் மூலமாக நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வசதியின் கீழ், பயனர்கள் தங்களது பிஎஃப் இருப்பில் 75 சதவீதம் வரை உடனடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ள அல்லது ஏடிஎம் மூலம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த புதிய வசதி ஜூன் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். யுபிஐ இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதிக்கான சோதனை நடைமுறைகள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நடைமுறைகள் என்ன?
தற்போதுள்ள நடைமுறைப்படி, பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு சந்தாதாரர்கள் ஆன்லைனில் கோரிக்கை விடுத்து, அது ஒப்புதல் பெறும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த புதிய அம்சம் உதவும் என்று நம்பப்படுவதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
"வழக்கமாக பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு முறையான கோரிக்கையை சமர்ப்பித்து, பிஎஃப்ஓ-வின் ஒப்புதலுக்குக் காத்திருக்க வேண்டும். இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது. தற்போது யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்படுவது அவசர தேவைகளுக்கு உடனடியாக பணத்தை பெற முடியும். அதே நேரத்தில், ஓய்வூதிய சேமிப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் என்ன? மற்றும் மோசடி தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே இந்த புதிய திட்டத்தின் பலன் குறித்து முழுமையாக அறிய முடியும் என்று நிபுணர்கள் கூறினர்.
முக்கிய மாற்றங்கள் என்ன?
புதிய மாற்றங்களின் ஒரு பகுதியாக, பிஎஃப் கோரிக்கைகளுக்கான ஆட்டோ செட்டில்மெண்ட் வரம்பை அரசு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேலும், சந்தாதாரர்கள் தங்களின் அடையாளத்தை சரிபார்க்க பல ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு பதிலாக, உமாங் (UMANG) செயலி மூலம் முக அங்கீகார தொழில்நுட்பத்தை (Face Authentication Technology) பயன்படுத்த முடியும்.
முக்கிய விவரங்கள்:
* EPFO 3.0 அறிமுகத் தேதி: ஜூன் இறுதிக்குள் அமலுக்கு வர வாய்ப்பு
* பணம் எடுக்கும் வரம்பு: பிஎஃப் இருப்பில் 75% வரை
* கட்டாய லாக்-இன் (Mandatory lock-in) எதிர்காலத்திற்காக குறைந்தபட்சம் 25% இருப்பு வைத்திருக்க வேண்டும்
* ஆட்டோ செட்டில்மெண்ட் வரம்பு: ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* இந்த புதிய மேம்படுத்தல் மூலம் விரைவான யுஏஎன் (UAN) ஆக்டிவேஷன், ஆன்லைன் பிஎஃப் பாஸ்புக்கை எளிதாக பார்ப்பது மற்றும் ஆதார் விவரங்களை விரைவாக திருத்தம் செய்வது போன்ற பிற சேவைகளும் எளிதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications