ஓபிஎஸ்க்கு செக் மேட்? அங்கீகரிக்காத தேர்தல் ஆணையம்.. டெல்லிக்கே சென்ற எடப்பாடி.. ஐகோர்ட்டில் மனு
டெல்லி: அதிமுக விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை இதுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்கும் தேதியை டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஒபிஎஸ்- இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைபாளராக ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை கோஷம் ஒலித்தது.

இதனால், தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தெர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அதிமுகவில் இருந்தே ஓ பன்னீர் செல்வத்தை நீக்குவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிரகா ஓ பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். எனினும், பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை அதிமுக வெளியிட்டது. இதற்கும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் மனு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அதிமுக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை வரும் திங்கள் கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டு வந்த போதும் தேர்தல் ஆணைய ஆவணங்களில் தற்போது வரை ஒருங்கிணைப்பாளர்கள் என்றே உள்ளது. எனவே, எடப்படி பழனிசாமி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications