சாணக்கியரே ஷாக் ஆகியிருப்பார்.. பிரியங்கா காந்தி சொன்னதுமே குலுங்கி குலுங்கி சிரித்த அமித்ஷா
டெல்லி: "இன்று சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் சாதுர்யத்தைப் பார்த்து அவரே அதிர்ந்து போயிருப்பார்" என அமித் ஷாவைப் பார்த்து பிரியங்கா காந்தி கிண்டலாகக் கூற, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட ஒட்டுமொத்த நாடாளுமன்றமே சிரிப்பால் அதிர்ந்தது.
மத்திய அரசின் திட்டப்படி, மக்களவை இடங்கள் 543-லிருந்து 816 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்று அரசு கூறினாலும், இது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்றும், தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டன.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதம் நேற்று விவாதம் நடந்தது. அப்போது வயநாடு எம்பி பிரியங்கா காந்தி பேசுகையில், "மத்திய அரசின் இந்த நகர்வு தேர்தலுக்கான 'ட்ரம்ப் கார்டு' என்று விமர்சித்தார். பாஜாகவினர் அரசியலமைப்பைச் சிதைப்பதன் மூலம் தங்கள் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துகின்றனர் என்று அவர் சாடினார்.
தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, "மகளிர் இடஒதுக்கீட்டை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால், இந்த மசோதாவில் அரசியல் வாடை அடிக்கிறது. பிரதமர் மோடி முன்னதாகப் பேசும்போது இந்தத் திட்டத்தைத் தடுத்தது காங்கிரஸ் என்பது போலப் பேசினார். ஆனால், இதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்த்தால், 1928-லேயே என் தாத்தா மோதிலால் நேரு இதற்கான விதையைப் போட்டார். பின்னர் எனது தந்தை ராஜீவ் காந்தி தான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்" என்று பதிலடி கொடுத்தார்.
அமித் ஷாவைச் சிரிக்க வைத்த பிரியங்கா
பிரியங்கா காந்தி பேசிக்கொண்டிருந்த போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பாஜக எம்பிக்கள் சிரித்துக் கொண்டே ஏதோ பேசினர். இதைக் கவனித்த பிரியங்கா காந்தி, உடனே அமித் ஷாவைப் பார்த்து, "நீங்கள் எல்லாரும் பிளான் பண்ணித்தான் வந்திருக்கிறீர்கள். இன்று சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் சாதுர்யத்தைப் பார்த்து அவரே ஷாக் ஆகியிருப்பார்" என்று கமெண்ட் அடித்தார்.
பிரியங்காவின் இந்தப் பேச்சைக் கேட்டு அமித் ஷா விழுந்து விழுந்து சிரிக்க, அவையில் இருந்த மற்ற எம்பிக்களும் சிரிப்பில் மூழ்கினர். இறுதியில், "பெண்களுக்குப் பொய் சொல்பவர்களை எளிதில் கண்டுபிடித்துவிடும் குணம் உண்டு, அதனால் பாஜக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று ஒரு போடு போட்டுவிட்டுப் பிரியங்கா தனது உரையை முடித்தார்.














Click it and Unblock the Notifications